கள்ளக்குறிசசியில் கேப்டனின் மச்சான் Vs டி.ராஜேந்தர்!
சென்னை: வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் மக்களவைத் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மச்சான் சுதீஷை எதிர்த்து லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் போட்டியிடுகிறார்.
திருச்சியில் நடிகர் மன்சூர் அலிகானும், கிருஷ்ணகிரியில் கோவிந்தராஜனும், திருவண்ணாமலையில் ஆறுமுகமும் அக் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் திமுக சார்பில் ஆதி சங்கரும், அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் தன்ராஜும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய டி.ராஜேந்தர்,
நாடாளுமன்றத் தேர்தலில் லட்சிய திமுக தனித்துப் போட்டியிடுகிறது. கூட்டணி அமையாவிட்டாலும் கொள்கையுடைய நாங்கள் நடைபோடுவதை நிறுத்த மாட்டோம். அதே நேரத்தில் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதால் அவர்களுடன் சேரவில்லை என்றார்.
பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால் அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கடைசி நேரத்தில் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஜுரத்தில் அவர் இப்படி கூறியுள்ளார். தேர்தல் நெருங்கி வந்து காங்கிரஸ் கட்சி இப்போது அதிகாரமற்ற நிலையில் இருக்கும்போது இந்த கோரிக்கையை அவர் வைத்துள்ளார். இதை முன் கூட்டியே ஏன் சொல்லவில்லை?.
இதை முன்பே சொல்லியிருந்தால் ஆயிரக்கணக்கான தமிழர்களை காப்பாற்றியிருக்கலாம். அதை விட்டு விட்டு கடைசி நேரத்தில் இதை சொல்வது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதை.
மத்தியில் ஒரு மாத ஆட்சி காலத்தை வைத்துக் கொண்டு இலங்கை தமிழர்களை காப்பாற்ற துடிக்கிறாரா? அல்லது தேர்தலில் தங்களை காப்பாற்றிக் கொள்ள துடிக்கிறாரா?.
இலங்கைத் தமிழர்களுக்காக தன் உடலில் தீ வைத்து கொண்டு முத்துக்குமார் உயிரிழந்தார். அவர் ஏற்றிய தீ கொளுந்து விட்டு எரிகிறது. இன்று சிவானந்தம் தன் உயிரை அர்ப்பணித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற தவறியவர்களை அந்த தீ சுட்டெரிக்கும். இந்தத் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.