கழுதை மீது ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்
ஆக்ரா: ஆக்ராவில் ஜன்வாடி சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் கழுதை மீது ஊர்வலமாக வந்து வேட்பு மனுதாக்கல் செய்த வினோதமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா தொகுதிக்கு வரும் மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து தற்போது வேட்புமனு தாக்கல் செய்யும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய பிரபல கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் வெகு விமர்சிகையாக பல வண்ண கார்களில் அணிவகுத்து வந்து சென்றனர்.
ஆனால், இவர்கள் அனைவருக்கும் நேர்மாறாக வித்தியாசமான வாகனம் ஒன்றில் எடவா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் இடம் வரை ஜன்வாடி சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் அகிலேஷ் குமார் வந்துள்ளார். அவர் வந்த வாகனம் வேறு எதுவுமில்லை. கழுதை தான்.
வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய அவரது கழுதைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இவரது இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போது இவர் தொகுதியில் மட்டுமில்லாமல் இந்தியா முழுமைக்கும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டார்.