உடைந்தது தேசியவாத காங்கிரஸ் - திண்டிவனம் ராமமூர்த்தி நீக்கம்- புதிய தலைவர் அக்பர்
கோவை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக அக்பர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். திண்டிவனம் ராமமூர்த்தியை அக்பர் தலைமையிலான கூட்டம் நீக்கி விட்டது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநில சிறு பான்மை பிரிவுத் தலைவர் அக்பர் தலைமையில் கோவையில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தை முன்னாள் மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி துவக்கிவைத்தார்.
அப்போது கூட்டத்தில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பேற்றது முதல் திண்டிவனம் ராமமூர்த்தி செயல்படாமல் உள்ளார்.
கட்சியை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லவில்லை. தமிழகத்தில் தேசியவாத காங்கிரஸ் முக்கியத்துவம் இழந்ததற்கு திண்டிவனம் ராமமூர்த்தியே காரணம் என்று கூறி மாநில தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தில், புதிய தலைவராக அக்பர், துணைத் தலைவராக பஷீர்பாய், பொதுச் செயலாளராக தமிழ்ச் செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.