பிரபாகரனை எதிர்க்கிறேன் - ஈழத் தமிழர்களை ஆதரிக்கிறேன் - ஜெ.
நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.
சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.