ஈழம்: அது பிரணாப் வேலை - அன்புமணி எப்படி குரல் கொடுக்க முடியும்? ராமதாஸ்
கோவை: அன்புமணி ராமதாஸ் வகித்து வந்தது சுகாதாரத் துறை. வெளியுறவுத்துறை அமைச்சர் செய்ய வேண்டிய வேலையை எப்படி அன்புமணி செய்ய முடியும் என்று கேட்டுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், சுகாதாரத்துறையில் அன்புமணி பல்வேறு சாதனைகளை புரிந்ததாக உலக அளவில் பாராட்டி வருகிறார்கள். பிரதமர் மன்மோகன் சிங்கும் அன்புமணியை மிகவும் பாராட்டினார்.
அன்புமணி எப்படி குரல் கொடுக்க முடியும்..
இலங்கை பிரச்சினையை தீர்க்க கோரி அன்புமணி குரல் கொடுக்கவில்லை என்று கருணாநிதி கூறி உள்ளார். அன்புமணி சுகாதாரத்துறையை கவனித்து வந்தார். வெளியுறவுத்துறை செய்ய வேண்டியதை சுகாதாரத்துறை அமைச்சர் எப்படி செய்யமுடியும்? பொறாமையின் காரணமாக அன்புமணியையும், பாமகவையும் விமர்சித்து வருகிறார்கள்.
ஈழ தமிழர் பிரச்சினையி்ல் இந்தியா தலையிடாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியிருக்கிறார். இது அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது என்று வாயளவில் மட்டுமே மத்திய அரசு கூறும் என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார். அவர் இலங்கை தமிழர்களை கைகழுவி விட்டார்.
இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போட்டது கிடையாது என்று எங்களை பார்த்து திமுக தலைவர் கூறி உள்ளார். அப்பாவி தமிழர்களுக்காக மலையை புரட்டிப்போட்டவர்கள் திமுக தற்போது என்ன செய்யப்போகிறது.
தேர்தல் அறிக்கையில் தனி ஈழம்தான் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று நாங்கள் குறிப்பிட்டு உள்ளோம். ஆனால் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர்களுக்கு அமைதியையும், உரிமையையும் வழி வகுத்திட திமுக தொடர்ந்து வலியுறுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு தனி தாயகம் அமைக்க வேண்டும் என்று திமுக கூறவில்லை. இதிலேயும் திமுக நழுவிச்சென்றுள்ளது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்காவிட்டால் இந்திய அரசு இலங்கை நாட்டுடனான தூதரக உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசு தலைவர், பிரதமர், சோனியா காந்தி ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பி உள்ளார்.
கூட்டணியை முறிக்கத் தயாரா கருணாநிதி?
இதே கருத்தை நாங்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே கூறி உள்ளோம். தூதரக உறவை இந்தியா முறித்துக் கொள்ளாவிட்டால். காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று கருணாநிதி சொல்ல தயாரா? என்றார் ராமதாஸ்.