காடு வெட்டி குருவுக்கு செக் வைக்க தயாராகும் ரஜினி ரசிகர் மன்றங்கள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை பாமக வேட்பாளர் காடுவெட்டி குருவுக்கு செக் வைக்க ரஜினி ரசிகர் மன்றங்கள் தயாராகி வருகின்றன.
ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திரையிடப்பட்டது. அப்போது பாமகவினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
இதில் ஜெயங்கொண்டம் பகுதியில் பாபா படம் திரையிடப்பட்டிருந்த தியோட்டர்களை வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். மேலும் திரைகளுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
பாபா முடிந்து சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன் என தொலைதூரம் போய் விட்டார் ரஜினி. ஆனால் பாபா படத்துக்கு பாமகவினர் கொடுத்த தொல்லைகளை ரஜினி ரசிகர்கள் இன்னும் மறக்கவில்லை.
இந்த நிலையில் தற்போது பாமக வேட்பாளராக திருவண்ணாமலையில் காடுவெட்டி குரு வேட்பாளராக களம் இறங்குகின்றார்.
இதையடுத்து குருவுக்கு ஆப்பு வைக்க தயாராகி விட்டன ரஜினி ரசிகர் மன்றங்கள். ரஜினி மன்ற முக்கிய நிர்வாகிகளும், ரஜினியின் விசுவாசிகளும் திருவண்ணாமலையில் உள்ள ஒரு முக்கிய ஓட்டல் ஓன்றில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.
அந்த கூட்டத்தில் பேசிய பலரும் தலைவர் ரஜினியின் படப் பெட்டியை தீ வைத்துக் கொளுத்தியவர் காடுவெட்டி குரு.
அவர் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் அது நமக்கு அவமானம். எனவே அவரை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என்று சபதம் செய்துள்ளனர்.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் சண்முகத்திடம் இதற்கான அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இதை அறிந்து குஷியான திமுக அமைச்சர் ஒருவர் அவர்களிடம் வலியச் சென்று ஏதாவது அரசு உதவி என்றால் தயங்காமல் என்னிடம் வாருங்கள் என்று அன்பு கட்டளையிட்டு வந்துள்ளாராம்.
எங்க தலைவருக்கு பிடித்த தெய்வம் அருணாச்சலேஸ்வரர் தான். அனால் தான் அண்ணன் காடுவெட்டி குருவை தெய்வமாக பார்த்து இங்க அனுப்பி வைத்துள்ளது என்று ரஜினி ரசிகர்கள் பஞ்ச் டயலாக் விடுகின்றனர்.