மாற்றுப் பாதையில் சேது திட்டம் - கூறுகிறது மதிமுக தேர்தல் அறிக்கை
சென்னை: சேது சமுத்திரத் திட்டத்தை ரத்து செய்வோம் என அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் அதன் கூட்டணிக் கட்சியான மதிமுக, சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்போம் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அறிக்கையின் முதல் பிரதியை துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா பெற்றுக்கொண்டார்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்...
தமிழ் ஈழமே தீர்வு..
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்பதை இந்திய அரசு ஏற்று கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்.
வேளாண்மை துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வலியுறுத்துவோம்.
முழுமையான மதுவிலக்கு கொண்டு வரும் வரை கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்.
உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு முழுமையாக கிடைத்திட சட்ட திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
இஸ்லாமியர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றத்துக்காக சச்சார் குழு பரிந்துரையை அமல்படுத்தவும், முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கவும் குரல் கொடுப்போம்.
பொது சிவில் சட்டம் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சியை முறியடிப்போம்.
தலித்கிறிஸ்தவர்களுக்கு இந்துக்களுக்கு உரிய அனைத்து உரிமைகளும், சலுகைகளும் கிடைக்க அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
மாற்றுப் பாதையில் சேது ...
பெரிய கப்பல்களும் செல்லும் வகையில் சேது சமுத்திர திட்டத்தை மாற்றி அமைத்து வெற்றிகரமாக நிறைவேற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்வோம்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து மீட்க வலியுறுத்துவோம்.
சுயநிதி கல்லூரிகளை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சட்டம் கொண்டுவர வலியுறுத்துவோம்.
நதிகள் இணைப்பு திட்டத்தின் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க வலியுறுத்துவோம். அண்டை மாநிலங்களுடன் ஏற்பட்டுள்ள நதிநீர் சிக்கல்களுக்கு தீர்வு காண்போம். நதிநீர் வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.
ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை...
அரசு ஊழியர்கள், மாதம் ஊதியம் பெறுவோர் வருமான வரி உச்சவரம்பு 3 லட்சமாக உயர்த்தப்படும்.
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வோம். சில்லறை வணிகத்தில் அயல் நாடுகளின் முதலீட்டை தடுத்து நிறுத்துவோம்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வலியுறுத்துவோம்.
பொள்ளாச்சி, கிணத்து கடவு, நாகர்கோவில், கன்னியாகுமரி ரெயில்வே பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க குரல் கொடுப்போம்.
சென்னை-மதுரை, கன்னியாகுமரி ரெயில் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்ற நடவடிக்கை எடுப்போம்.
தேர்தல் முறையில் சீர்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்.