அமைச்சரை திருப்பி அனுப்பிய கமுதி மக்கள்
கமுதி: ராமநாதபுரம் திமுக வேட்பாளர் ரித்தீசுக்கு ஆதரவாக கமுதியில் பிரசாரம் செய்யச் சென்ற திமுக அமைச்சர் சுப தங்கவேலனை மக்கள் முற்றுகையிட்டு திருப்பி அனுப்பினர்.
ராமநாதபுரத்தில் தனது தம்பிக்கு சீட் பெற முயன்றார் தங்கவேலன். ஆனால், அழகிரியின் உதவியோடு இந்த சீட்டைப் பிடித்துவிட்டார் ரித்தீஷ். இத்தனைக்கும் தங்கவேலனுக்கு ரித்தீஷ் பேரன் முறை.
முதல்வர் கருணாநிதியிடம், என் தம்பிக்கு சீட் தராவிட்டாலும் பரவாயில்லை.. ரித்தீசுக்குத் தராதீர்கள் என்று சொல்லிப் பார்த்தார் தங்கவேலன். ஆனால், இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி சீட் வாங்கிவிட்டார் ரித்தீஷ்.
இதையடுத்து பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கினார் தங்கவேலன். ஆனால், அமைச்சர் பதவியில் இருக்கனுமா வேணாமா என்று கேட்டு அவரை அழகிரி வாட்டி எடுத்ததையடுத்து வேண்டா வெறுப்பாக ரித்தீசுக்காக பிரச்சாரத்தில் இறங்கினார் தங்கவேலன்.
இந்நிலையில் நேற்று ரித்தீஷ் கமுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் தங்கவேலன், பேரூராட்சி தலைவர் அம்பலம், வேளாண்மை விற்பனை குழு தலைவர் வேல்ச்சாமி ஆகியோர் உடன் சென்றனர்.
கமுதியில் நாடார் உறவின் முறை அமைப்பினர் தங்கவேலனை வழி மறித்து இந்தப் பகுதிக்கு தங்கவேலன் எந்தப் பணியையும் செய்வில்லை என்று கூறி முற்றுகையிட்டனர். அவரை பிரசாரம் செய்யவிடாமல் திருப்பி அனுப்பினர்.
இதையடுத்து ரித்தீஷ் மட்டும் கமுதி நாடார் உறவின்முறை மகமைக்கு சென்று அவர்களிடையே பேசினார். அவர் பேசுகையில், பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் இதைச் செய்வேன், அதைச் செய்வோம் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர். மக்களை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது.
நான் நீங்கள் விரும்பும் வகையில் திட்டங்களை நிறைவேற்றித் தருவேன். தயவு செய்து ஓட்டு போடுங்கள் என்றார்.