'தாயகம்' வந்த கனிமொழி-உண்ணாவிரத பெண்களுக்காக கண்ணீர்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் வலியுறுத்தி சென்னையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 20 பெண்களை சந்தித்து திமுக எம்.பி கனிமொழி அவர்களுக்கு கண்ணீர் மல்க ஆறுதல் சொன்னார்.
இலங்கையில் போர் பகுதியில் சிக்கியுள்ள 1.9 லட்சம் அப்பாவி தமிழர்களை காப்பாற்ற உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் 20 பெண்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
ஆனால், இவர்களது உண்ணாவிரதத்தை நிறுத்தக்கூட சோனியா காந்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் உண்ணாவிரதம் நேற்று 8வது நாளாக தொடர்ந்ததால் அதில் பங்கேற்ற 11 பெண்களின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு திமுக எம்.பி. கனிமொழி உண்ணாவிரதம் இருக்கும் பெண்களை சந்திக்க தாயகம் வந்தார். தரையில் சோர்வுடன் படுத்திருந்த பெண்களுக்கு அருகே தரையில் அமர்ந்து உடல்நலன் குறித்து விசாரித்தார்.
அப்போது உண்ணாவிரதம் இருந்த பெண்களில் ஒருவர் இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள். அதற்கு முன் எங்கள் 20 பேரின் உயிர் ஒரு பொருட்டு அல்ல என் கண்ணீருடன் தெரிவித்தார். இதையடுத்து கனிமொழியின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது.
இதையடுத்து கனிமொழி அவர்களிடம் கூறுகையில், போர் நிறுத்தம் ஏற்பட முதல்வர் கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உங்கள் கோரிக்கையை சோனியா காந்தி கவனத்திற்கு கொண்டுசெல்வேன். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை யாரும் நியாயப்படுத்த வில்லை.
உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது. நீங்கள் நலமாக இருந்தால்தானே இலங்கை தமிழர்களுக்காக போராட முடியும். எனவே, தயவு செய்து உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்து அங்கிருந்து கிளம்பினார்.
பின்னர் அவர் வெளியில் கூடியிருந்த நிருபர்களிடம் கூறுகையி்ல், இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கும் பெண்களுக்கு திமுக சார்பில் அனுதாபம் தெரிவிக்க இங்கு வந்தேன். இந்த விஷயத்தில் எங்களுக்கும் வலியும் வேதனையும் உண்டு.
போர் நிறுத்தம் ஏற்பட சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அவர்களின் கோரிக்கையை சோனியாவிடம் எடுத்துச் சொல்வேன் என்றார் கனிமொழி.
வைகோ, நல்லகண்ணு ஆறுதல்...
முன்னதாக நேற்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நல்லகண்ணு ஆகியோர் தாயகம் வந்து அவர்களின் உடல்நிலையை கேட்டறிந்தனர். அவர்களது போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
தங்கபாலுவிடம் முறையிடுவோம்... இயக்குனர் அமீர்
சினிமா இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, மனோபாலா, சசி, சரவணா சுப்பையா, பாலாஜி சக்திவேல், பாடலாசிரியர் அறிவுமதி ஆகியோரும் பெண்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது அமீர் நிருபர்களிடம் கூறுகையில்,
அந்த பெண்களின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. அதனால் உண்ணாவிரதத்தை கைவிடும்படி வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்வதில் உறுதியாக இருக்கிறார்கள். போராட்டத்தை கைவிட விடாப்பிடியாக மறுத்துவிட்டனர்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சத்தியமூர்த்தி பவன் சென்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் முறையிடப் போகிறோம் என்றார் அமீர்.
காங்கிரஸ் பேச்சுவார்த்தை தோல்வி...
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் காங்கிரசார் சிலர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்துக்கு வந்தனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சார்பில் மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது சுதர்சனம் அவர்களிடம் கூறுகையில், தற்போது சோனியா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மூன்று நாட்களில் உங்களின் கோரிக்கையை சோனியாவின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம். அதனால் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றார்.
ஆனால், இதை உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்கள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து போராட்டக்குழு அமைப்பாளர் பேராசிரியை சரஸ்வதி நிருபர்களிடம் கூறுகையில்,
உண்ணாவிரதம் இருக்கும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கே காங்கிரசாருக்கு 8 நாட்கள் ஆகியிருக்கிறது. இலங்கை விவகாரத்தில் அவர்கள் மிகவும் மெத்தனமாக இருக்கிறார்கள். போர் நிறுத்தம் ஏற்பட சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் தலையாய கோரிக்கை.
காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் மூன்று நாளில் சோனியாவின் பதிலை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். அந்த பதிலின் அடிப்படையில் நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம். அதுவரை உண்ணாவிரதம் தொடரும் என்றார் சரஸ்வதி.