ஈழ தமிழர்களுக்கு ரூ. 6.5 கோடி நிவாரண பொருட்கள்
சென்னை: இலங்கையில் உணவு, உடை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் வாடும் 40 ஆயிரம் தமிழ் குடும்பங்களுக்கு சுமார் ரூ. 6 கோடியே 46 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இந்த வார இறுதியில் அனுப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு, முதற்கட்டமாக கடந்த ஆண்டி நவம்பர் 13ம் தேதி 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் ரூ. 10 கோடியே 6 லட்சம் மதிப்புடைய நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலமாக இலங்கையில் இருக்கும் இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டது.
பின்னர் அது செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் இலங்கை தமிழ் குடும்பங்களுக்கு உதவுவதற்காக தற்போது இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, 40 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவைப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, சமையல் பாத்திரங்கள், தட்டுகள், டம்ளர்கள் ஆகியவையும், அதோடு வேட்டிகள், சேலைகள், லுங்கிகள், நைட்டிகள், போர்வைகள், துண்டுகள் என ரூ. 6 கோடியே 46 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புடைய நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதல்வர் பார்வையிட்டார்...
இந்த நிவாரணப் பொருட்களை முதல்வர் கருணாநிதி, கடந்த 20ம் தேதி தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டார். இவை அனைத்தும் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ள கப்பலில் இந்த வார இறுதிக்குள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்படும். பின்னர் வழக்கம் போல் செஞ்சிலுவைச் சங்கம் வழியாக தமிழர்களுக்கு வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.