சேது திட்டம் அவசியம்-அன்புமணி; அதிமுக டென்சன்...
வேலூர்: சேது சமுத்திர திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும். அது பாமகவின் கொள்கை முடிவுகளில் ஒன்று என பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி கூறியுள்ளார்.
இது குறித்து வேலூரில் அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில்,
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய சோனியா, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி என பல தலைவர்களை சந்தித்து பாமக சார்பில் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், மத்திய அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை.
காங்கிரஸ் கட்சியை ஒழிப்பேன் என்று கூறிய திருமாவளவன், தற்போது காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்துவிட்டார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே மாறுபட்ட கருத்து உள்ளது.
அதை போல, சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்வோம் என்று அதிமுக கூறுவது அந்த கட்சியின் கருத்து. ஆனால், இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பது பாமகவின் கொள்கை.
தேர்தலில் பண பலம், ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு எதை செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளனர். தேர்தலை அமைதியாக நடத்த கோரி தேர்தல் ஆணையத்துக்கு பாமக சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் என்றார் அன்புமணி ராமதாஸ்.
சேது திட்டத்தை பாஜகவுடன் சேர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா எதிர்த்து வரும் நிலையில் அன்புமணி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.