நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள்: விருதுநகர்-கார்த்திக், தேனி-பார்வதி
சென்னை: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் சார்பில் அதன் தலைவர் கார்த்திக் விருதுநகர் மக்களவைத் தொகுதியிலும், தேனி தொகுதியில் பார்வதியும் போட்டியிடுகின்றனர். இருவரும் பாஜகவின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
பார்வதி இந்தக் கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவியாக உள்ளார். பாஜக-சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள கார்த்திக் கட்சி இந்த இரண்டு தொகுதிகளில் மட்டும் போட்டியிடுகிறது.
இது குறித்து கார்த்திக் கூறுகையில்,
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி ஆகிய 5 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட விரும்பினோம். ஆனால் கூட்டணிக்காக, நண்பருக்காக சில தொகுதிகளை விட்டுக் கொடுத்திருக்கிறோம். இதில் எங்கள் தொண்டர்களுக்கு வருத்தம் என்றபோதும் நான் சொல்லிய விளக்கங்களை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தவிர மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட விரும்புகிறோம். எங்கள் வேட்பாளர்கள் பாஜகவின் தாமரை சின்னத்திலே போட்டியிடுவர்.
தென்காசி தொகுதியில் சரத்குமார் போட்டியிடுவதற்காக விட்டுக் கொடுத்தோம். ஒருவேளை தென்காசியில் அவரது கட்சி போட்டியிடாவிட்டால் நாங்கள் போட்டியிடுவது பற்றி யோசிப்போம்.
தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு தருவதாக சரத்குமார் கூறியது எனக்கு தெரியாது. நாங்கள் நிற்கும் தொகுதியில் அவர்கள் போட்டியிடாமல் எங்களுக்கு ஆதரவு கொடுத்தால் நாங்களும் ஆதரவு கொடுப்பது பற்றி யோசிப்போம்.
நான் நாளை விருதுநகரில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்குகிறேன் என்றார்.
பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக பொறுப்பு வகித்து வந்த கார்த்திக்கை அந்தக் கட்சி விரட்டிவிட்டது. இதையடுத்து புதுக் கட்சி தொடங்கினார்.
பி.பி.ஏ. படித்துள்ள கார்த்திக் 150 படங்களில் நடித்துள்ளார். 48 வயதாகும் இவர் சரணாலயம் என்ற ஒரு அமைப்பையும் நடத்தி வருகிறார். விருதுநகரில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வைகோவை எதிர்க்கிறார் கார்த்தி்க்.
இந்தத் தொகுதியில் திமுக சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் கார்த்திக்குக்கு திமுகவின் மறைமுக ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது.
தேனி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பார்வதியின் (39) சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், இடுக்கன்துறை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.