இலங்கை அவலம்-ஐநாவில் விளக்க மறுத்த நம்பியார்
இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக ஐ.நா. செல்லாமல் இடையில் இந்தியாவில் தங்கிச் சென்றுள்ளார் விஜய் நம்பியார் என்பது குறிப்பிடத்தக்கது.
பான் கி மூன்தான், இலங்கை மனிதப் பேரவலம் குறித்து நேரில் அறிந்து கொள்வதற்காக நம்பியாரை அனுப்பி வைத்தார். அவரும் கொழும்பு சென்று ராஜபக்சே, அவரது தம்பி கோதபாய ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் தான் போய் பார்த்து விட்டு வந்ததை விளக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதுகுறித்து விளக்கம் அளிக்க விஜய் நம்பியார் பிடிவாதமாக மறுத்து விட்டாராம்.
கொழும்பிலிருந்து இந்தியா சென்றபோது இந்திய அரசுத் தரப்பி்ல் விஜய் நம்பியாருக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கொழும்பு வந்திருந்த விஜய் நம்பியார் வன்னிப் பகுதிக்கு வர வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் பிரிவு தலைவர் பா.நடேசன் கோரிக்கை விடுத்திருந்தார். விஜய் நம்பியாரும் அந்தத் திட்டத்துடன்தான் இருந்தார். ஆனால் இலங்கை அரசு நம்பியாரை வன்னிக்கு செல்ல வேண்டாம் என தடுத்து விட்டதாம்.
இலங்கை நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், நம்பியாருடன் பேச ஒப்புக் கொண்டனர். ஆனால், நான் இலங்கை சென்றது ஒரு மீடியேட்டராக மட்டுமே. அங்கு அதிபர் ராஜபக்சேவுடன் பேசியது குறித்து நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. அது ரகசியமானது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலாக இருந்தாலும் கூட சொல்ல முடியாது என கூறி விட்டாராம் நம்பியார்.
நம்பியாரின் இந்த செயல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். ஐ.நா.வின் இணை செயலாளர் ஒருவர் பாதுகாப்பு கவுன்சிலிடம் விளக்கம் தர முடியாது என்று கூறியிருப்பது குறித்து அவர்கள் ஏமாற்றமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் தர முடியாது என்று மறுத்துள்ள விஜய் நம்பியாரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.