உடனடி போர் நிறுத்தம்-அத்வானி வேண்டுகோள்
டெல்லி: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என பாஜக பிரதம வேட்பாளர் அத்வானி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்தின் வெறிச்செயலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகிறார்கள். இது குறித்து நேற்று அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடக்கும் படுகொலையை தடுக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. இலங்கையில் நடக்கும் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இலங்கையின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதே சமயம் தமிழர்களுக்கு சம உரிமையும் மரியாதையும் வழங்கப்பட்டு, அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த இரு கொள்கைகளை பின்பற்றி தான் இலங்கையில் அமைதி காண முடியும்.
மத்திய அரசின் தெளிவற்ற வெளியுறவு கொள்கையால் தமிழர்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையில் அமைதியை நிலைநாட்டும் சக்தியாக இருந்த இந்தியாவின் பங்கை காங்கிரஸ் அரசு வெறும் பார்வையாளர் என்ற அளவுக்கு குறைத்து விட்டது. போரை நிறுத்துமாறு இலங்கை அரசை நெருக்க மத்திய அரசு தவறிவிட்டது.
கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கிறது...
காங்கிரஸ் அரசு விடுதலை புலிகளையும், தமிழர்களையும் பிரித்து பார்க்க தவறிவிட்டது. இப்பிரச்சினையில் மத்திய அரசு கண்களை மூடி கொண்டு விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு உதவி வருகிறது என்றார் அத்வானி.