பஸ்களை ஓட்ட தடை-அதிமுக-கம்யூ டிரைவர்கள் புகார்
சென்னை: திமுக அழைப்பு விடுத்து இன்று நடந்து வரும் பந்த்தையொட்டி அரசு பஸ்கள் பெருமளவில் ஓடவில்லை. இந்த நிலையில் பஸ்களை ஓட்ட முன்வந்த அதிமுக, இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்களுக்கு டிப்போ மேலாளர்கள் அனுமதி தராமல் மறுப்பதாக கூறி டிரைவர்கள் போராட்டம் நடத்தினர்.
திமுக சார்பில் இன்று ஈழத்தில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த பந்த் இன்று காலை தொடங்கியது.
பந்த்தையொட்டி நேற்று இரவு முதலே அரசுப் பேருந்துகள் எதுவும் ஓடவில்லை. வெளியூர்ப் பேருந்துகள் சுத்தமாக ஓடவில்லை.
இந்த நிலையில் இன்று காலை, அதிமுக, பாமக, மதிமுக, இடதுசாரி தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட டிப்போக்களுக்கு வந்தபோது டிப்போக்கள் மூடப்பட்டிருந்தன.
நாங்கள் பஸ்களை ஓட்டுகிறோம், டிப்போக்களை திறங்கள் என்று அவர்கள் கேட்டபோது டிப்போக்களை திறக்க மேலாளர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆங்காங்கே அதிமுக மற்றும் பிற தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நகரத்தில் 3 ஆயிரம் மாநகர பஸ்கள் உள்ளன. 15 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இன்று வேலைக்கு வரவில்லை. 920 அரசு விரைவு பஸ்கள் உள்ளன. இதில் காலையில் ஓடும் பஸ்கள் இயக்கப்படவில்லை.
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர், வெளி மாநில பஸ்கள் இயக்கப்படவில்லை. எனவே வெளியூர் பயணிகள் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினார்கள்.
டிக்கெட்கள் திருப்பித் தரப்பட்டன..
வெளியூர் பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு அதற்கான பணம் திருப்பி கொடுக்கப்பட்டது.
எப்போதும் பயணிகள் கூட்டத்தில் தத்தளிக்கும் கோயம்பேடு மாநகர பஸ் நிலையம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.
ரயில்கள் ஓடின..
ரெயில்கள் வழக்கம்போல் ஓடின. பஸ்கள் ஓடாததால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மின்சார ரெயில்களும் நிரம்பி வழிந்தன.
காலை 4 மணிக்கு தொடங்கும் மின்சார ரெயில் சேவை பாதுகாப்பு காரணங்களுக்காக 6 மணிக்கு தொடங்கியது. எனவே காலையிலேயே மின்சார ரெயில்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
வெளியூர் செல்லும் குருவாயூர், பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் களிலும், பாண்டிச்சேரி பாசஞ்சர் ரெயிலும் வழக்கத்தை விட அதிக கூட்டம் இருந்தது.
இது போல மும்பை, டெல்லி, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம் ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ரெயில் நிலையங்களிலும் அதிகமான பயணிகள் காணப்பட்டன.
ஷேர் ஆட்டோக்களுக்கு கிராக்கி..
ஷேர் ஆட்டோக்கள் வழக்கமாக ஓடின. பஸ்கள் ஓடாததால் ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி இருந்தது. சில ஷேர் ஆட்டோ டிரைவர்கள் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலித்தனர்.
ஆட்டோக்கள் ஓடின..
பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடின. சில ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவசரமாக செல்ல வேண்டியவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து ஆட்டோவில் சென்றனர்.
7 விமானங்கள் ரத்து..
சென்னையிலிருந்து கிளம்பும் ஏழு விமானங்கள் பயணிகள் போதிய அளவில் இல்லாததால் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்க்பட்டுள்ளது.
கரூரில்..
கரூரில் பந்த் காரணமாக 99 சதவீத கடைகள் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பஸ்களும் இயங்கவில்லை.
கரூர் நகரம், குளித்தலை, அரவாக்குறிச்சி, பள்ளப்பட்டி போன்ற நகரங்களிலும், சுற்றப்புற கிராமங்களிலும் வணிக நிறுவனங்கள், கடைகள், மெடிக்கல் கடைகள் போன்றைகள் அடைக்கப்படிருந்தன.
கரூர் பஸ் நிலையம் வெறிச் சோடிக் காணப்பட்டது.
கரூரில் இருந்து வெளியூருக்கோ, அல்லது வெளியூரில் இருந்து கரூர்-க்கோ இருந்து பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதனால் மக்கள் வீட்டிலே முடங்கிக்கிடந்தனர்.
மக்களின் பொழுது போக்கு இடமான சினிமா திரையரங்குகளும் இன்று காலை, மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன.
ஆனால் தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் மட்டும் வழக்கம் போல செயல்பட்டன. வழக்கத்திற்கு மாறாக காலை முதலே குடிமக்கள் அலைமோதினர்.