தென்காசி: வனத்துறை உதவியுடன் மான் வேட்டை
தென்காசி: தென்காசியில் வனத்துறையினரின் உதவியுடன் மான் உள்ளிட்ட வனவிலங்குகளை சில முக்கிய பிரமுகர்கள் வேட்டையாடியதாக கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் கைதான ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நேற்று தென்காசி அருகே அச்சன்புதூரில் போலீசார் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்ததாக மீராகனி என்பவார் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர்.
அவர்கள் யாரிடம் துப்பாக்கி வாங்கினார்....எதற்காக துப்பாக்கியை பயன்படுத்தினார்...என்பது குறித்து போலீசார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
விசாரணையின் போது மீராகனி கொடுத்த வாக்குமூலம்,
உள்ளூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான முன்னாள் எம்எல்ஏ ரசாக்கின் சகோதரர்கள் அலி, அச்சன்புதூரை சேர்ந்த அதிமுக மாவட்ட மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சசீகரனின் தந்தை தங்கம், மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த முக்கிய பிரமுகர் வைரம், மற்றும் அதே பகுதியில் பணியாற்றி வனத்துறை காவலர்கள், அதிகாரிகள், நெல்லை மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கர் உள்ளிட்டோருடன் இணைந்து வேட்டைக்கு சென்றோம்.
அப்போது மான், மிளா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட விலங்குகளை கள்ள துப்பாக்கி மூலம் வேட்டையாடி, பின்னர் அவற்றை பங்கீட்டு கொண்டோம் என்றார்.
வன விலங்குகளை வேட்டையாடுவது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். மான் வேட்டையாடியதாக நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பாலயோகி, நடிகர் சல்மான்கான் உள்ளிட்ட பிரபலங்களே சர்சையில் சிக்கி சிறை செல்ல நேர்ந்தது.
இந்நிலையில் கள்ள துப்பாக்கி வைத்திருந்தவருடன் விலங்குகளை காப்பாற்ற வேண்டிய வனத்துறையினரே முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து வனவிலங்குளை வேட்டையாடியதாக வெளியான தகவல் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.