நான் பேச நினைத்ததெல்லாம்-நாஞ்சில் சம்பத்!
கோவை: தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மதிமுக.கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கோவை சிறையில் இருந்து விடுதலையானார்.
திருப்பூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக மதிமுககொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்தை திருப்பூர் போலீசார் கைது செய்தனர்.
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக தொடர்ந்து அவர் பேசி வந்ததாக கூறி தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து நாஞ்சில் சம்பத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நாஞ்சில் சம்பத்துக்கு ஆதரவாக வைகோவே நேரில் ஆஜராகி வாதாடினார். இதனையடுத்து, அவரை சென்னனை உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாஞ்சில் சம்பத், 46 நாட்களுக்கு பின் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசியதாவது:
நான் பல்வேறு நாடுகளில் நடைபெற உள்ள இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்க முடிவு செய்திருந்தேன். சிறையில் அடைக்கப்பட்டதால் அங்கு எல்லாம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
சிறையில் இருந்த காலத்தில் 'நான் பேச நினைத்ததெல்லாம்' என்ற தலைப்பில் ஒரு புத்தகமும், 'தேச பாதுகாப்பு சட்டத்தில் நான்' என்ற ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளேன். இந்த இரு புத்தகங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றார்.