வைகோ மனு தாக்கல்-கலெக்டருடன் வாக்குவாதம்
இன்று காலை 11 மணிக்கு வைகோ விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ரகுபதியிடம் வைகோ தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் கே.கே.சிவசாமி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒச்சாத் தேவர், சிப்பிப்பபாறை ரவிச்சந்திரன் எம்பி, மதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.
மனு தாக்கல் செய்ய வந்த வைகோ கலெக்டர் ரகுபதியிடம் மனுவை கொடுத்தார். அப்போது அந்த வேட்பு மனுவை கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ரகுபதி உட்கார்ந்தவாறு பெற்றுக் கொண்டார்.
ஏன் எழுந்து நின்று மனுவை பெறக்கூடாதா என்று வைகோ கேட்டார்.
அதற்கு, நீங்களும் உட்கார்ந்தவாறே மனு தரலாம் என கலெக்டர் பதில் தந்தார். இதையடுத்து இருவருபக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து உறுதிமொழியை வைகோ நின்றவாறே வாசித்துவிட்டு அங்கிருந்து கோபத்துடன் வெளியே வந்தார்.
தேமுதிக-மதிமுக தொண்டர்கள் மோதல்...
வெளியே வந்த வைகோ தனது வேனில் ஏற முயன்றபோது தேமுதிக வேட்பளார் பாண்டியராஜன் மனு தாக்கல் செய்ய வந்தார். வைகோவை பார்த்ததும் அவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு வைகோவும் அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வேனில் ஏறினார்.
ஆனால், வேன் செல்லக் கூட இடம் விடாமல் தேமுதிக தொண்டர்கள் கூடி நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களை மதிமுக தொண்டர்கள் விலகச் சொல்ல, பதிலுக்கு தேமுதிக தொண்டர்கள் முறைக்க அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து வைகோவின் வேனை செல்ல விடாமல் தேமுதிகவினர் தடுத்தனர். இதனால் பெரும் பரபரப்பு போலீசார் ஓடி வந்து இரு தரப்பையும் அமைதிப்படுத்தினார்.
சிவசேனா வேட்பாளர் எரிச்சல்...
பின்னர் அங்கு வந்த சிவசேனா கட்சியின் வேட்பாளர் சாந்தி, நான் வந்து நீண்ட நேரம் ஆகியும் என்னிடம் மனு வாங்காமல் வைகோவிடம் மனு வாங்கியதை கண்டிக்கிறேன் என்று கூறிவிட்டு மனு தாக்கல் செய்துவிட்டுச் சென்றார்.
இன்று விருதுநகரில் ஜெ பிரச்சாரம்...
இந் நிலையில் இன்று வைகோவுக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிவகாசியில் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.
மாலையில் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மோகனை ஆதரித்து ஜெயலலிதா பேசுகிறார்.