போர் பகுதிகளுக்கு எங்களை அனுமதியுங்கள்-ஐ.நா
இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பிராக் பேசுகையில், ஐ.நா. மனிதாபிமான விவகாரம் மற்றும் அவசர கால மீட்புப் பிரிவு ஊழியர்கள் பலர் இலங்கையில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும்.
போர்ப் பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவ அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும்.
இலங்கையில் மனிதாபிமான நிலை மிகவும் மோசமாக உள்ளது. இப்பகுதிகளுக்கு ஐ.நா. ஊழியர்கள் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் இலங்கை அரசு தடையாக இருக்கக் கூடாது.
இலங்கையில் போர் ஓய்வும், மீண்டும் ரத்த ஆறு ஓடாமல் தடுக்கவும் உலக சமுதாயம் ஒரே குரலில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.
போர் பாதித்த பகுதிகளுக்குச் செல்ல ஐ.நா. ஊழியர்கள், அதிகாரிகள் தயாராக உள்ளனர். அவர்கள் செல்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
தற்போது இலங்கையில் உள்ள முகாம்களில் 13 ஐ.நா. ஊழியர்கள் அடைக்க்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க ஐ.நா. சபை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்றார் பிராக்.