அப்பாவிகள் நலனுக்காக புலிகள் சரணடைய வேண்டும்-ஐ.நா. பாதுகாப்பு சபை
பிரான்ஸ் நாட்டின் கோரிக்கைப்படி இலங்கை இனப்படுகொலை குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி, மனிதாபிமான பேரவலம், அங்கு நடந்து வரும் இனப்படுகொலை, என்ன மாதிரியான நடவடிக்கைகள் இப்போது தேவை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு சபை தலைவரும், மெக்சிகோ நாட்டுத் தூதருமான கிளாட் ஹெல்லர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும். தீவிரவாதத்தை விட வேண்டும். அமைதி முயற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும். ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐ.நா. ஆதரவுடன் மதிப்பீடுகளை மேற்கொள்ள இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் அனுமதிக்க வேண்டும், ஒத்துழைக்க வேண்டும்.
வன்னிப் பகுதியில், தற்போது மிகப் பெரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளு. அப்பாவிகள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர்.
அங்கு சிக்கியிருக்கும் அப்பாவிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பு நாடுகள் தாரளமாக செய்ய முன்வர வேண்டும் என்றார்.