ரிலையன்ஸ்: நான்காவது காலாண்டு லாபம் 9% குறைந்தது!
மும்பை: நாட்டின் முதல் நிலை தனியார் நிறுவனமும், பங்குச் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் சக்தி மிக்கதுமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட் தொடர்ந்து இரு காலாண்டுகளாக வருவாய் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் பெட்ரோ கெமிக்கல்ஸ் தயாரிப்புகளுக்கு தேவை குறைந்துவிட்டதால் லாபத்தில் 9 சதவிகிதம் குறைந்துள்ளது. நான்காவது காலாண்டு அறிக்கையின்படி ரிலையன்ஸ் நிகர லாபம் ரூ. 3,546 கோடி.
மேலும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் ரிலையன்ஸ் பெட்ரோலியப் பொருட்களின் விலையும் சரிந்து 25 சதவீத வருவாய்க் குறைவு ஏற்பட்டுள்ளதாம்.
2009 நிதியாண்டில் ரிலையன்ஸின் நிகர லாபம் 22 சதவீதம் குறைந்து ரூ.15279 கோடியாக உள்ளது என ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
"உண்மையில் மிகப்பெரிய நெருக்கடிகளுக்கு இடையே இந்த அளவு வர்த்தகத்தைத தக்க வைத்துக் கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான். மிகப் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளோம். 2009 நிதியாண்டில் மட்டும் ரூ.94,038 கோடி ஏற்றுமதியைச் செய்துள்ளது ரிலையன்ஸ்..." என்றார் முகேஷ் அம்பானி.
சில வாரங்களுக்கு முன் கிருஷ்ணா-கோதாவரி படுகையில் எரிவாயு உற்பத்தியை ரிலையன்ஸ் தொடங்கியது. இப்போது உற்பத்தியின் அளவு பல மடங்கு அதிகரிக்கப்பட உள்ளதால், அதன் பங்குகள் விலை மேலும் உயர் வாய்ப்புகள் உள்ளன.
ரிலையன்ஸ் கையிருப்பில் ரூ.25,000 கோடி ரொக்கமும், நிறுவனத்தின் கடனாக ரூ. 53,457 கோடி கடனும் உள்ளதாக நான்காவது காலாண்டறிக்கை சொல்கிறது.