2வது கட்ட தேர்தல்-55 சதவீதம் வாக்குப்பதிவு
டெல்லி: மக்களவைக்கு நேற்று இரண்டாவது கட்டமாக நாடு முழுவதும் 140 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
543 பேர் கொண்ட நாடாளுமன்றத்துக்கு முதல் கட்டமாக கடந்த 16ம் தேதி 124 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. நேற்று 2வது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 140 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.
இதில் ஆந்திராவில் 20 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 17 தொகுதிகளிலும், அஸ்ஸாமில் 11 தொகுதிகளிலும், பிகாரில் 13 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 25 தொகுதிகளிலும், ஒரிஸ்ஸாவில் 11 தொகுதிகளிலும், உத்தரப் பிரதேசத்தில் 17 தொகுதிகளிலும், ஜார்கண்ட்டில் 8 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், காஷ்மீரில் ஒரு தொகுதியிலும், திரிபுராவில் 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதற்காக 12 மாநிலங்களில் மொத்தம் 2.22 லட்ம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேசம், பிகாரில் 44 சதவீதமும் வாக்குகள் பதிவாயியின.
ஆந்திரா-ஒரிஸ்ஸா சட்டசபைகளுக்கும்..
இந்தத் தேர்தலோடு ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸா மாநில சட்டசபைகளுக்கும் நேற்று இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடந்தது.
ஆந்திராவில் 140 தொகுதிகளிலும், ஒரிஸ்ஸாவின் 77 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்தது.