கருணாநிதி ஏதாவது செய்ய வேண்டும்-பரதன்
பெங்களூர்: தமிழர்கள் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். நம் கண் முன்பாகவே அங்கு இனப்படுகொலை நடக்கிறது. எனவே முதல்வர் கருணாநிதி இனியும் அமைதி காக்காமல் செயல்பட வேண்டும், ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், திமுகவும், தமிழர்களைக் காக்கவோ, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ எதுவும் செய்யவில்லை. அமைதியாக இருந்து வருகின்றன.
அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுவதற்குத்தான் முக்கியத்துவம் தருகிறார் மன்மோகன் சிங்.
இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவை எட்டியிருந்தால் அது மிகப் பெரிய சாதனையாக மாறியிருக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்கு என்னவெல்லாம் நடக்கிறதோ அதெல்லாம் நமது நாட்டில் உள்ள தமிழர்களையும் கடுமையாக பாதிக்கும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக முக்கிய கட்சியாக உள்ளது. இருந்தாலும், தமிழர்கள் மறுவாழ்வுக்கோ, அவர்களது துயரங்ளைத் தீர்ப்பதற்கோ அது எதுவுமே செய்யவில்லை. இவர்களுக்கெல்லாம் மக்கள் லோக்சபா தேர்தலில் சரியான பாடம் கற்பிப்பார்கள்.
பந்த்கள் நடத்துவதால் எந்த பலனும் இல்லை என்பதை கருணாநிதி உணர வேண்டும். அதற்குப் பதிலாக அப்பாவித் தமிழர்களைக் கொல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். அமைதியான முறையில், அரசியல் ரீதியிலான தீர்வு காணப்படும். இது சாதாரண பிரச்சினை இல்லை. மிகவும் உணர்ச்சிகரமான விவகாரம் என்றார் பரதன்.
கெளடா கூறுகிறார்....
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவ கெளடா நிருபர்களிடம் பேசுகையில்,
பிரபாகரன் எனது நண்பர் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார். ஆனால் அவரது கருத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மெளன் சாதிக்கின்றனர். இதற்கான காரணம் என்ன?.
பிரபாகரனை சரணடையும்படி இலங்கை வலியுறுத்தி வருகிறது. ஆனால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர் தப்புவாரா?, அல்லது தற்கொலை செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியலால்தான் உருவானது. இது அரசியலால்தான் அழியும். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி கொள்கையை எதிர்த்து நெல்சன் மண்டேலா போராடினார். இதற்காக 30 வருடங்கள் சிறையில் வாடினார். அதன் பிறகுதான் தனது போராட்டத்தில் வெற்றி பெற்றார் என்றார்.