'தயாநிதி': சிபிஐ கண்டுபிடிப்பாம்..ஜெ 'கண்டுபிடிப்பு'!
சிவகாசி: மத்திய அமைச்சர் என்ற முறையில் தனக்கு வழங்கப்பட்ட தொலைத் தொடர்பு வசதியை சன் டிவிக்காக தயாநிதி மாறன் பயன்படுத்தியதாகவும், அதை மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ கண்டுபிடித்துள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டுபிடித்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை ஆதரித்து சிவகாசியில் நடந்த பொதுக் கூட்டத்தி்ல் ஜெயலலிதா பேசுகையில்,
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது அவருக்கு பிஎஸ்என்எல் மூலம் 323 தொலைபேசி இணைப்புகள் தரப்பட்டன. அவை அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்டவை.
தகவல்களையும் ஒலி, ஒளி காட்சிகளையும் உலகின் எந்த மூலைக்கும் மின்னல் வேகத்தில் அதில் அனுப்ப முடியும். இந்த இணைப்புகளுக்காக தயாநிதியின் வீட்டிலேயே ஒரு தொலைபேசி இணைப்பகத்தை பிஎஸ்என்எல் அமைத்தது.
தொலைத் தொடர்பு அமைச்சர் என்ற முறையில், அலுவலகப் பயன்பாட்டுக்காக தரப்பட்ட சிறப்பு இணைப்பு இது. ஆனால் 2007ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரசு செலவில் இந்த இணைப்பு சன் டி.வி. அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.
இணைக்கப்பட்டனவாம்....கண்டுபிடித்ததாம்....
அமைச்சர் வீடும், சன் டிவி அலுவலகமும் ரகசியமாக கேபிள் வழியாக இணைக்கப்பட்டனவாம். அமைச்சருக்கு அரசு கொடுத்த தொலைத் தொடர்பு இணைப்புகளை, அமைச்சர் பயன்படுத்துவது போல் வெளியில் தோற்றத்தை ஏற்படுத்தினர் என்றும் ஆனால், இவற்றைப் பயன்படுத்தியது சன் டிவி தான் என்றும் சிபிஐ கண்டுபிடித்ததாம்.
தயாநிதி மாறனுக்கு கொடுக்கப்பட்ட குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் இருந்து மட்டும் 2007 மார்ச் மாதத்தில் 48,72,027 தொலைபேசி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சன் டிவியில் இருந்து படங்கள், பாடல்கள், தொடர்கள் போன்ற ஒலி, ஒளி காட்சிகள் உலகின் பல இடங்களுக்கும் அரசு தொலைபேசியைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன என்ற உண்மையை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதற்கான ஆதாரங்களை தகவல்களை சுற்றுப் பயணத்தில் இருந்த என்னிடம் ஒருவர் கொடுத்துள்ளார்.
கருணாநிதி குடும்பமும், மாறன் குடும்பமும் சண்டையிட்டுக் கொண்டபோது, இது தொடர்பான எல்லா உண்மைகளும் சிபிஐயால் கண்டுபிடிக்கப்பட்டன.
2007 செப்டம்பர் மாதமே இந்த முறைகேடு குறித்த அனைத்து விவரங்களையும் சிபிஐ திரட்டி உயர் அதிகாரிகளுக்குத் தந்தது.
வந்திருக்கும்....தெரிந்திருக்கும்...
ஆனால், தயாநிதி மாறன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு கோப்புகள் தயாராகி, மத்திய அமைச்சரான ராசாவின் பார்வைக்கும் அது சென்றிருக்கிறது. இந்தத் தகவல் பிரதமரின் பார்வைக்கும் வந்திருக்கும். மத்தியில் ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கருணாநிதியின் குடும்பமும் மாறன் குடும்பமும் இணைந்துவிட்ட பிறகு எல்லா ஊழல்களும் மூடி மறைக்கப்பட்டுவிட்டன. திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் ஊழல்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளைத் தண்டிக்க மக்களுக்கு கிடைத்திருக்கும் அரிய வாய்ப்புதான் இந்த பொதுத் தேர்தல் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications