உணவு, மருந்தைத் தடுக்கும் இலங்கை அரசு - பட்டினியில் தவிக்கும் 1,65,000 தமிழர்கள்
தமிழர்கள் மீது படைகளை ஏவி சரமாரியாக கொன்று குவித்து வரும் இலங்கை அரசும், ராணுவமும், இப்போது இடம் பெயர்ந்து வந்துள்ள தமிழர்களையும் பட்டினியில் சாக விட்டு வருகிறது.
சாப்பாடு கிடைக்காமல், காயங்களுக்கு மருந்து கிடைக்காமல் தமிழர்களை சாக விடும் புதிய கொடூர நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் கண்டனம் தெரிவித்து, இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என ஐ.நாவுக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வன்னியில் உள்ள மக்களை மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசிடம் முன்வைப்பதற்கு சர்வதேச சமுதாயம் தவறி விட்டது.
தமிழர்களை பட்டினியில் ஆழ்த்துவதையும், மருந்துகள் கிடைக்காமல் செய்வதையும் ஒரு ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தி வருகிறது. இது ஜெனீவா உடன்பாட்டை மீறும் செயலாகும். போர்க் குற்றமாகும்.
சில நாட்களுக்கு முன்னர் வன்னியைச் சென்றடைந்திருக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளைத் தாங்கிய கப்பலை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி விட்டது. இதனால் அந்தக் கப்பலால் போக முடியாமல் கடலில் நின்று கொண்டிருக்கிறது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள 12 சதுர கிலோ மீட்டர் பகுதியில் சுமார் 1,25,000 மக்கள் இருக்கின்றனர். ஏப்ரல் 2 ஆம் தேதிக்குப் பின்னர் இவர்களுக்கான உணவு விநியோகங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய பட்டினிச் சாவைத் தவிர்ப்பதற்காக உடனடியாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என ஏப்ரல் 11 ஆம் தேதி வன்னிப் பகுதி அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை இதுவரையில் இலங்கை அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
வன்னியில் உள்ள மக்கள் தினசரி ஒருவேளை உணவை மட்டுமே கடந்த ஐந்து வாரங்களுக்கும் மேலாக சாப்பிட்டு வருகின்றனர்.
பாதுகாப்பு வளையப் பகுதியில், இலங்கைப் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்திய பின்னர் இது கூட கிடைக்காத நிலையில் வன்னித் தமிழர்கள் பெரும்பாலானோர் உள்ளனர் என்று புலிகள் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் பகுதிகளில் உள்ள தமிழர்களையும் சேர்த்து மொத்தம் 1 லட்சத்து 65 ஆயிரம் தமிழர்கள் பட்டினிச் சாவை சந்திக்கும் அபாயத்தி்ல் உள்ளனர்.