சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சிபிஐ ரெய்ட்-பெண் அதிகாரி கைது
சென்னை: ஏஜெண்டுகளிடம் பணம் வசூலித்துக் கொண்டு பாஸ்போர்ட் வழங்கியதாக சென்னை பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஒரு பெண் புரோக்கரும் கைதாகியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் முறைகேடுகள் நடப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
ஒரு புரோக்கர் ரூ.13,000 வாங்கிக் கொண்டு பாஸ்போர்ட் வாங்கித் லட்சுமணன் என்பவர் சிபிஐயில் புகார் செய்தார். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை பாஸ்போர்ட் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
நள்ளிரவு வரை நடந்த சோதனையில் பாஸ்போர்ட் அலுவலக பெண் அதிகாரி ஒருவரின் காரில் ரூ.5 லட்சம் பணம் இருந்ததாகவும் அதை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியாதகவும் தெரிகிறது. மேலும் இரவிலேயே அந்த அதிகாரியின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த ரெய்டின்போது அங்கிருந்த 24 புரோக்கர்களும் சிக்கினர். டிராவல் ஏஜென்சி நடத்தி வரும் பாத்திமா என்பவரும் அடக்கம். இவர் தான் ரூ. 13,000 தந்தால் உடனே பாஸ்போர்ட் வாங்கித் தருபவர் என்கிறார்கள். அவரிடம் விசாரணை நடத்தியதில், பாஸ்போர்டுக்கு தான் வசூலிக்கும் பணத்தில் தான் ரூ. 4,000த்தை மட்டும் வைத்துக் கொண்டு ரூ.9,000த்தை பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்.
அவர் கை கைட்டியதையடுத்து அந்த பெண் பாஸ்போர்ட் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இன்று அவரை கைது செய்ததாகத் தெரிகிறது. இதை சிபிஐ உறுதி செய்யவில்லை.
அதே நேரத்தில் பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சோதனை குறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், முழு விசாரணை முடிவடையவில்லை. முடிந்த பிறகே இது தொடர்பான தகவல் தரப்படும் என்றார்.
தொடர்பான செய்திகள்:
கைதான பெண் பாஸ்போர்ட் அதிகாரியின் சொத்து ரூ. 50 கோடி