போர் நிறுத்தம் தான் இந்தியாவின் உடனடி தேவை-ப.சி
சென்னை: எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோர் கொழும்பு சென்று ராஜபக்சேவுடன் இதயப்பூர்வமான சந்திப்பை முடித்து விட்டு திரும்பியது குறித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கினார்.
நாராயணனும், மேனனும் நாடு திரும்பிய பின்னர் ப.சிதம்பரம் நேற்று இரவு முதல்வரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்.
பின்னர் வெளியில் வந்த சிதம்பரம் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்நிறுத்தம்தான் இந்தியாவின் உடனடி தேவை என்று ராஜபக்சேவிடம் தெளிவாக கூறப்பட்டு விட்டது.
இதற்கு மேலும் நாம் இலங்கையை வேண்டிக் கொண்டிருக்கப் போவதில்லை. தொடர்ந்து அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம்.
உடனடியாக சண்டை நிறுத்தப்பட வேண்டும். அப்பாவித் தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை ராஜபக்சேவிடம் தெளிவுபடுத்தி விட்டோம். இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை அரசு சாதகமாக நடந்து கொள்ளும் என நம்புகிறோம் என்றார்.
முதல்வர் கருணாநிதி தெரிவிக்கையில், இலங்கை அரசு சாதகமாக செயல்படும் என நம்புகிறேன். பிரதமர் மன்மோகன் சிங்கும் என்னிடம் தொலைபேசியில் பேசி விவரத்தை விளக்கினார் என்றார்.