காஷ்மீரில் 31 பாக். தீவிரவாதிகள் ஊடுருவல்- பயங்கர சதி அம்பலம் - ஒருவன் கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 31 பாகிஸ்தான் தீவிரவாதிகள் உட்பட 120 பேர் ஊடுருவி இருப்பதாகவும், அவர்களில் ஒருவனை கைது செய்திருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பிரிகேடியர் குர்மீத் சிங் கூறுகையில்,
நேற்று வடக்கு காஷ்மீரின் குரஸ் பகுதிக்குள் 100 முதல் 120 பேர் வரை எல்லை தாண்டி, காஷ்மீருக்குள் ஊடுருவியுள்ளனர். அவர்களில் 31 பேர் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.
அவர்களுடன் 40 முதல் 45 சுமை தூக்குபவர்களும், சில கைடுகளும், சில உதவியாளர்களும் ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு பாகிஸ்தானில் 18 முதல் 90 நாட்கள் வரை கடும் தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வடக்கு காஷ்மீரில் கடும் பனிபொழிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு தீவிரவாதிகள் ஊடுருவதை கண்டுபிடிக்க பதித்து வைக்கப்பட்டிருந்த சாதனங்கள் அனைத்தும் பணியில் மூழ்கி, செயலிழந்துவிட்டன.
இதனால் அவர்களது ஊடுருவலை தடுக்க முடியவில்லை. இன்னும் பல தீவிரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி வர தயாராக இருக்கிறார்கள்.
தீவிரவாதிகளின் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு சாதனைங்களை இடைமறித்து கேட்பதன் மூலமாக ராணுவம் அவர்களது திட்டங்களை அறிந்து வருகிறது. காஷ்மீரில் தலிபான்கள் நடமாட்டம் எதுவும் இல்லை.
ஒருவன் கைது...
ஊடுருவிய தீவிரவாதிகளில் ஒருவனை இந்திய ராணுவம் கைது செய்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஹிஜிபுல் முகாஜிதின் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அவனது பெயர் சையத் மொயினுல்லா ஷா என்றும் பாகிஸ்தானில் வடமேற்கு மாகாணத்தை சேர்ந்தவன் என்றார்.