குஜராத்தில் பரபரப்பு - பிரதமரை நோக்கி ஷூ வீச்சு
அகமதாபாத்தில் இன்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் ஷூவை எடுத்து அவரை நோக்கி வீசினார்.
இதைப் பார்த்து விட்ட போலீஸார் பாய்ந்து சென்று அந்த நபரை மடக்கினர். இதனால் ஷூ பாதியிலேயே விழுந்து விட்டது. பின்னர் அந்த நபரை குண்டுக்கட்டாக அங்கிருந்து கொண்டு சென்றனர்.
ஷூ வீசிய நபருக்கு 25 வயதுக்குள் இருக்கலாம். அவர் ஒரு கல்லூரி மாணவர் என்று கூறப்படுகிறது. அவர் மீது வழக்குப் போட வேண்டாம், விட்டு விடுங்கள் என போலீஸாருக்கு மன்மோகன் சிங் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த மாதத் தொடக்கத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது சீக்கிய பத்திரிக்கையாளர் ஷூ வீசினார். இதுதான் இந்தியாவில் சமீப காலத்தில் நடந்த முதல் பரபரப்பு ஷூ வீச்சு சம்பவம்.
இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜின்டால், அன்வர் உசேன் ஆகியோர் மீதும், அத்வானி மீது செருப்பும் வீசப்பட்டது.
இந்த நிலையில் பிரதமரை நோக்கி ஷூ வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.