செய்தித்தாள்கள் படிக்க கஸாபுக்கு தடை-நீதிமன்றம் உத்தரவு
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி கஸாப் செய்திதாள்கள் படிக்க நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. வேண்டுமானால் புத்தகங்களை படித்து கொள்ளலாம் என கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் சிலர் மும்பையில் தாக்குதல் நடத்தினர். இதில் கஸாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். மற்றவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர். தற்போது மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கஸாப்
வழக்கு நடைபெற்றுகிறது.
இந்நிலையில் கஸாப் தான் செய்திதாள்களை படிக்க விரும்புவதாக தனது வக்கீல் அப்பாஸ் கஷ்மி மூலம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தான். இதை விசாரித்த நீதிமன்றம் அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
இது குறித்து அவனது வக்கீல் கஷ்மி கூறுகையில்,
கஸாப் சிறையில் செய்திதாள்களை படிக்க விரும்புவதாக நீதிமன்றத்தில் மனு கொடுத்தேன். அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதற்கு பதிலாக கஸாபுக்கு புத்தங்கள் படிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கஸாபுக்கு உருது நன்றாக தெரியும் என்பதால் அவருக்கு உருது புத்தகங்களை வாங்கி கொடுக்க இருக்கிறேன். இந்த புத்தகங்கள் சிறை அதிகாரி மூலமாக கஸாபை சென்றடையும். கஸாப் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த புத்தகங்களை அதிகம் படிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.
வழக்கு குறித்து அவருடன் பேசுவதற்கு எனக்கு குறைந்த நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 11 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த வழக்கில் வாதாட முழுமையாக இன்னும் தயாராகவில்லை. எனது பணியில் அதிக நேரம் இந்த வழக்கிற்கு தான் உழைத்து வருகிறேன் என்றார் அவர்.