பப்பு யாதவுக்கும், தாயாருக்கும் வயது வித்தியாசம் 7 மட்டுமே - புதிய சிக்கல்
புதுடில்லி: பீகார் முன்னாள் எம்.பி. பப்பு யாதவுக்கும் அவரது தாயாருக்கும் 7 வயது வித்தியாசம் மட்டுமே இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து வயது முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த பப்பு யாதவ் (இவர் லாலுவின் மச்சான்) கடந்த 2004ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாதேபுரா தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார். அப்போது வேட்புமனு தாக்கல் செய்த அவர், அதில் தனக்கு 37 வயது என குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி தற்போது அவருக்கு வயது 42 ஆகிறது.
சில காரணங்களுக்காக சமீபத்தில் பாட்னா உயர்நீதி மன்றம் இவருக்கு தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது. இந்நிலையில் பப்புயாதவின் தாயார் சாந்தி பிரியா, வரும் நாடாளுமன்ற தேர்தலில் புர்னே தொகுதியில் காங்கிரசின் ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் வேட்புமனு தாக்கலின் போது தனது வயது 49 என குறிப்பிட்டுள்ளார்.
இதையடு்தது அங்கு சர்ச்சை வெடித்துள்ளது. பப்பு யாதவுக்கும், அவரது தாயான இவருக்கும் தற்போது 7 வயது தான் கூடுதலாக உள்ளது. இது எப்படி சாத்தியம் என கேள்வி எழுப்பியுள்ளார் சாந்தி பிரியாவின் போட்டி வேட்பாளர் ஒருவர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் அவர் புகார் கொடுத்துள்ளார்.
எனது தவறு இல்லை...
இது குறித்து சாந்தி பிரியா கூறுகையில், இது எனது தவறு எதுவும் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையில் என்ன வயது உள்ளதோ அதை நான் குறிப்பிட்டு்ள்ளேன் என்றார்.
பீகார் துணை முதல்வர் சுசில் மோடி கூறுகையி்ல், இது வினோதமான வழக்கு. இதை தேர்தல் ஆணையம் தான் கவனிக்க வேண்டும் என்றார்.