போர் நிறுத்தம் குறித்து மேனன், நாராயணன் பேசவே இல்லை: ராஜபக்சே செயலர்
கொழும்பு: கொழும்பு வந்திருந்தபோது போர் நிறுத்தம் செய்வது குறித்து இந்திய வெளியுறவு செயலாளர் மேனனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், அதிபர் ராஜபக்சேவிடம் பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் முடிவுப்படி எஸ்.எஸ்.மேனும், எம்.கே.நாராயனும், கொழும்பு சென்று அதிபர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினர். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தையின்போது போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
ஆனால் இருவருமே, போர் நிறுத்தம் குறித்து பேசவே இல்லை என்று ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கே தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற விஷயங்கள் தொடர்பாகவே இந்தியத் தூதுக்குழுவினருடன் முக்கியமாகப் பேசப்பட்டது. அது தொடர்பான திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பு அக்கறை காட்டியது என்று கூறியுள்ள வீர துங்கே, போர் நிறுத்தம் குறித்து இந்தியத் தூதுவர்கள் பேசவே இல்லை என்று போட்டு உடைத்துள்ளார்.