செங்கோட்டையில் 1,300 குடும்பங்கள் தேர்தல் புறக்கணிப்பு
செங்கோட்டை: வரும் நாடாளுமன்ற தேர்தலை செங்கோட்டையை சேர்ந்த 13 ஆயிரம் குடும்பங்கள் புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளன.
செங்கோட்டை அருகே உள்ளது வல்லம் கிராமம். இங்கு சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஒருபிரிவினர் டிஜிட்டல் போர்டு வைத்துள்ளனர்.
செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தட்டி போர்டு வைப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அதை அகற்றவும் உத்தரவிட்டார். ஆனால் டிஜிட்டல் போர்டு வைத்தவர்கள் அதனை அகற்ற மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தி்ல்குமரன் போர்டுகளை அகற்றினார். அதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை கண்டித்து வல்லம் கலைஞர் காலனி, சந்தன மாரியப்பன் கோவில் தெரு, பலவேசக்காரன் தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறி அவ்வழியாக வந்த பஸ் டிரைவர் சுந்தரவேலு செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மேலும் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த சுமார் 700 ஆண்களும், பெண்களும் வல்லம் சந்தன மாரியம்மன் திருமண மண்டபம் முன்பு கூடி காவல்துறைக்கு எதிராக கோஷம் போட்டனர்.
காவல் துறையை கண்டித்த பொது மக்கள் 247 பேர் மீது போடப்பட்ட இரு வழக்குகளையும் உடனை திரும்ப பெற வேண்டும், இது சம்பந்தமாக நியாயமான தீர்பு கிடைக்காத பட்சத்தில் இப்பகுதியை சேர்ந்த தேவேந்திர குல மக்கள் சுமார் 1300 குடும்பத்தினர் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது எனவும் முடிவு செய்தனர்.
அதற்கு முன்னோடியாக தங்களது குடும்ப அட்டையையும், வாக்காளர் அடையாள அட்டைகளையும் நாளை தேவேந்திர குல கூட்டமைப்பின் தலைவர் பசுபதிபாண்டியன் தலைமையில் செங்கோட்டை வருவாய் வட்டாட்சியரை சந்தித்து திரும்ப ஒப்படைப்பது எனவும் திர்மானித்துள்ளனர்.