சிபிஐ விசாரணை பேச்சு - ரூ. 10 கோடி கேட்டு ஜெ.வுக்கு தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்
சென்னை: தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியதற்கு மன்னிப்பு வேண்டும். இல்லாவிட்டால் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜெயலலிதா விருதுநகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தொலைபேசி இணைப்புகள் மூலமாக சன் டிவி நிகழ்ச்சிகளை அப்லிங்கிங் செய்துள்ளார் தயாநிதி மாறன்.
மாறனுக்கு மத்திய அமைச்சர் என்ற முறையில் 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் வீடியோ, ஆடியோ பதிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப முடியும். மேலும் தயாநிதி மாறன் வீட்டில் தனி இணைப்பகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்து.
அவரது வீட்டில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்பு மூலம் ரகசியமாக சன் டிவி நிகழ்ச்சிகளை அனுப்பி ஒளிபரப்பியுள்ளனர்.
இதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. இதையடுத்தே தயாநிதி மாறன் குடும்பத்தினருக்கும், கருணாநிதி குடும்பத்தினருக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டு மூடி மறைக்கப்பட்டு விட்டது என்று கூறியிருந்தார்.
இதையடுத்தே தயாநிதி மாறன் ஜெயலலிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், உங்களது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், ரூ. 10 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார் தயாநிதி மாறன்.