இங்கிலாந்து-பிரான்ஸ்-ஸ்வீடன் அமைச்சர்கள் இலங்கை விரைவு
கொழும்பு: இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், அப்பாவி மக்களைக் கொல்லக் கூடாது என்று இலங்கை அரசை நேரில் வலியுறுத்துவதற்காக 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கொழும்பு விரைகின்றனர்.
இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார், ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர்ச சார்ல் பில்ரிஸ்ட் ஆகியோர் நாளை மறு நாள் கொழும்பு வருகின்றனர்.
பட்டினிச் சாவை சந்தித்துள்ள அப்பாவித் தமிழர்களைக் காக்கவும், போர் பகுதியிலிருந்து ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்புடன் வெளியேற்றவும் இலங்கை அரசை இவர்கள் நேரில் வலியுறுத்தவுள்ளனர்.
இந்த நிலையில்,டேவிட் மிலிபான்ட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மோதல் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களுடைய உயிரிழப்புக்கள் பெருமளவுக்கு அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் பெரும் கவலை அடைந்துள்ளார். போர் நிறுத்தம் அவசியம் என்பதை அவர் இலங்கை அரசுக்கு மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தை முன் வைத்து மத்திய அரசு கொடுத்த நெருக்கடியால் தாற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது இலங்கை.