ஈழத்திற்கு இலங்கையில் இடமில்லை-கோதபாய நக்கல்
கொழும்பு: ஈழம் அமைக்க இலங்கையில் இடம் இல்லை. வேண்டுமானால், வேறு இடம் பார்த்து அமைத்துக் கொள்ளுங்கள் என்று அதி்முக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்பு செயலாளருமான கோதபாய ராஜபக்சே கொழுப்புத்தனமாக பதிலளித்துள்ளார்.
தனி ஈழம் கண்டிப்பாக அமையும், அதை அதிமுக அமைத்துத் தரும் என்று ஜெயலலிதா அதிரடியாக அறிவித்துள்ளார். இதுநாள் நாள் வரை ஈழத்தை எதிர்த்து வந்த ஜெயலலிதா இப்படி அதிரடியாக அறிவித்திருப்பது இலங்கைக்கு அதிர்ச்சியும், எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோதபாய ராஜபக்சே கூறுகையில், இவர்கள் எல்லாம் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. இலங்கையில் ஈழம் அமைக்க இடம் இல்லை. வேண்டுமானால் ஜெயலலிதா வேறு இடம் பார்த்து அங்கு அமைத்துக் கொடுக்கட்டும்.
ரவிசங்கர் காட்டிய வீடியோவைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும், இடம் பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் ஹிட்லர் காலத்து சித்திரவதைக் கூடங்கள் போல இருப்பதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.
இதை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். உண்மையில், ரவிசங்கர் இந்த முகாம்களைப் பார்த்து விட்டு அதிபரை சந்தித்தபோது, உலகிலேயே நான் பார்த்த முகாம்களிலேயே சிறந்த முகாம்கள் இவைதான் என்று கூறினார்.
இப்படி இருக்க முடிந்து போன தீவிரவாதிகள் கதைக்கு உயிர் கொடுக்க சிலர் முயல்வது ஏன் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கோதபாய.