மதுரையில் திமுக அலுவலகத்துக்கு தீ வைப்பு
மதுரை: மதுரையில் திமுக தேர்தல் அலுவலகம் தீ வைத்து கொளுத்தப்படும் சம்பவம் தொடர்கிறது. நேற்று தத்தனேரி திமுக தேர்தல் அலுவலகம் தீ வைக்கப்பட்டது. இதுவரை அங்கு 6 திமுக அலுவலகங்கள் கொளுத்தப்பட்டிருப்பது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் மே 13ம் தேதி நடக்கிறது. இதில் மதுரை தொகுதியில் திமுகவின் தென் மண்டல செயலாளர் அழகிரி முதன் முறையாக போட்டியிடுகிறார். இதனால் மதுரை தொகுதி இந்தியாவின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
அதிமுக கூட்டணியி்ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மோகன் போட்டியிடுகிறார். இதையடுத்து மதுரையில் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
இதற்காக திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலகங்கள் அமைத்துள்ளன. இதில் தேர்தல் விதிமுறைகளை மீறி தேர்தல் அலுவலகங்கள் அமைக்கப்பட்டதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது புகார் வந்துள்ளன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மதுரை சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ் காலனி உள்ளிட்ட 4 இடங்களில் இருந்த திமுக தேர்தல் அலுவலகங்கள் ஒரே நாளில் தீ வைத்து எரிக்கப்பட்டன. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை புது ஜெயில் ரோட்டில் இருந்த 29வது வார்டு பகுதியை சேர்ந்த திமுக அலுவலகம் கொளுத்தப்பட்டது. இதில் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சி தோரணங்கள், மேஜை, மின்விசிறி, நாற்காலி உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகியது.
இந்நிலையில் நேற்றும் திமுக அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. தத்தனேரி அருகே முதல் வார்டில் உள்ள திமுக அலுவலகத்துக்கு அதிகாலை 2 மணி அளவில் யாரோ மர்ம ஆசாமி தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து திமுகவினர் செல்லூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். மதுரையில் இதுவரை 6 திமுக அலுவலகங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.