ராமநாதபுரம் வேட்பாளர்கள் முதுகுளத்தூர் மக்கள் வைக்கும் கோரிக்கைகள்!
முதுகுளத்தூர்: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், முதுகுளத்தூர் பகுதியின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயம்...
முதுகுளத்தூர் பெரிய கண்மாய் எந்தக் காலத்திலும் நீர் நிரம்பியதில்லை. இதனால் விவசாயம் விளையாமல் ஆண்டு தோறும் முதுகுளத்தூர் தாலுகா வறட்சிப் பகுதி ஆகிவிடுகிறது. முதுகுளத்தூர் பெரிய கண்மாய்க்கு வைகை ஆற்றுத் தண்ணீரை கொண்டு வர வேண்டும்.
சாலை வசதி...
முதுகுளத்தூர் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை வசதி இல்லை. அதனால் சாயல்குடியிலிருந்து முதுகுளத்தூர், பரமக்குடி வழியாக தஞ்சாவூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையை (NH29) தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்
பேருந்து வசதி...
முதுகுளத்தூரில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும், புண்ணியஸ்தலங்களுக்கும் செல்ல பேருந்து வசதி இல்லை.
முதுகுளத்தூரில் இருந்து கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பாபநாசம், தென்காசி,குற்றாலம் ஆகிய ஊர்களுக்கு பேருந்து விட வேண்டும்.
இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவ புண்ணியஸ்தலங்களான பழனி, நாகூர், வேளாங்கண்ணி ஆகிய புண்ணியஸ்தலங்களுக்கும் முதுகுளத்தூரிலிருந்து பேருந்து விட வேண்டும்.
கல்வி வசதி ...
முதுகுளத்தூர் பகுதிமக்கள் பெரும்பாலோனோர் நடுத்தர மற்றும் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் ஆவர். தங்களது பிள்ளைகளை தனியார் தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பதற்கு வசதியில்லாதவர்கள். அதனால் இப்பகுதி மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி எட்டாக்கனியாக உள்ளது.
பின் தாங்கிய முதுகுளத்தூர் பகுதி மாணவர்களின் நலன் கருதி, மத்திய அரசின் பின் தாங்கிய பகுதி திட்டத்தின் கீழ் முதுகுளத்துரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும்.
முதுகுளத்தூர் வழியாக ரயில்பாதை...
முதுகுளத்தூர் பகுதி ரயில் பாதை இல்லாமல் காலம் காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இக்குறையைப் போக்க மானாமதுரையிலிருந்து பார்த்திபனூர், அபிராமம், பசும்பொன், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும்.
இப்புதிய வழித்தடத்தில் ரயில்பாதை அமைக்கப்பட்டால் முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, தாலுகாக்கள் மிகபெரும் பொருளாதார வளர்ச்சி அடையும். பின் தாங்கிய இம்மூன்று தாலூகாக்களும் முன்னேற்றம் அடையும்.மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை குறைந்த தூரத்தில் வட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என்று துபாய்,அபுதாபி,ஷார்ஜா,பஹ்ரைன், கத்தார், ஓமன், சவுதி அரேபியா நாடுகளின் முதுகுளத்தூர் வட்டார பிரதிநிதிகள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.