தேடப்படுவோர் பட்டியலிலிருந்து குவாத்ரோச்சியை நீக்க இன்டர்போலுக்கு சிபிஐ பரிந்துரை
சிபிஐயின் பரிந்துரையின்பேரில் கடந்த 12 வருடங்களாக குவாத்ரோச்சி, இன்டர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
ரூ. 64 கோடி அளவிலான போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் முக்கிய குற்றவாளியான குவாத்ரோச்சி, இந்தியாவின் கோரிக்கைக்கேற்ப ரெட் அலர்ட் பட்டியலின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அந்தப் பட்டியலிலிருந்து குவாத்ரோச்சியை நீக்கி விடுமாறு சிபிஐ பரிந்துரைத்துள்ளது.
சிபிஐயின் வழக்கறிஞர் மிலன் பானர்ஜியின் சட்ட ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவை சிபிஐ எடுத்தது.
இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் ஹர்ஷ் பாஹல் கூறுகையில், 1999ம் ஆண்டு முதல் இந்த வழக்கு நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் பல்வேறு சட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் குவாத்ரோச்சியை இன்டர்போல் பட்டியலிலிருந்து நீக்கும் முடிவுக்கு வந்தோம். இதுகுறித்து உரிய நீதிமன்றத்தில் ஏப்ரல் 30ம் தேதி இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும்போது முறைப்படி தெரிவிக்கப்படும் என்றார்.
பாஜக கடும் கண்டனம்..
குவாத்ரோச்சியை வான்ட்டட் லிஸ்ட்டிலிருந்து எடுக்கும் முடிவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், சாதாரண மக்களுடன்தான் நாங்கள் இருக்கிறோம் என்கிறது காங்கிரஸ். ஆனால் அது குவாத்ரோச்சி போன்றவர்களுக்கு ஆதரவாகத்தான் இருககிறது என்பது இப்போது நிரூபனமாகி விட்டது.
இந்தியாவை விட்டு வெள்ளையர்களை வெளியேற்றினார் மகாத்மா காந்தி. ஆனால் இப்போது காங்கிரஸார், இன்டர்போல் ரெட் அலர்ட் நோட்டீஸிலிருந்து வெள்ளைக்காரர்களை வெளியேற்றுகிறது காங்கிரஸ்.
புது அரசு வருவதற்கு முன்பு இந்த வழக்கை மூடி விட முடிவ செய்து விட்டது காங்கிரஸ்.
குவாத்ரோச்சி நீக்கம் தேர்தல் பிரச்சினையாக உருமாறும் என்றார்.
ஆனால் இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது அரசுக்கும், தனிப்பட்ட நபருக்கும் இடையிலான விவகாரம். இதில் காங்கிரஸுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
எதிர்க்கட்சியினர் கடந்த 20 வருடங்களாக போபர்ஸ் வழக்கை ஒரு பிரச்சினையாக கூறி வருகின்றனர். ஆனால் நிச்சயம் இது ஒரு பிரச்சினையே அல்ல, குறிப்பாக தேர்தல் பிரச்சினையே அல்ல என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர். பரத்வாஜை சமீபத்தில் சிபிஐ இயக்குநர் அஸ்வினி குமார் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து குவாத்ரோச்சியை நீக்கும் முடிவுக்கு சிபிஐ வந்ததாக கூறப்படுகிறது.
குவாத்ரோச்சி யார்...
இத்தாலியின் சிசிலியில் பிறந்தவர் குவாத்ரோச்சி. எனி என்ற இத்தாலிய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதியாக 60களின் மத்தியில் அவர் இந்தியாவுக்கு வந்தார்.
ராஜீவ் காந்தி குடும்பத்தினருடன் அவர் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டார். சோனியா காந்தி இத்தாலியைச் சேர்ந்தவர் என்பதால் இது விரைவில் சாத்தியமாயிற்று.
1987ம் ஆண்டு போபர்ஸ் பேர ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த ஊழலில் இடைத்தரகாக செயல்பட்டார் குவாத்ரோச்சி என்பது குற்றச்சாட்டு.
அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது குற்றச்சாட்டு எழுந்ததால், 1989ம் ஆண்டு தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது காங்கிரஸ்.
1993ம் ஆண்டு ஜூலை மாதம் குவாத்ரோச்சி, போபர்ஸ் வழக்கில் ஒரு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.