ஈழத் தமிழர்களுக்கு உதவ ரூ. 100 கோடி நிதி - மன்மோகன் அறிவிப்பு
டெல்லி: இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நல்வாழ்வுக்காக ரூ. 100 கோடி நிதியை அளிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
போர்ப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கை:
போர் நடவடிக்கைகள் முற்று பெற்று விட்டது என்றும், கனரக துப்பாக்கிகள், போர் விமானங்கள், வான் வழித்தாக்கும் போர் ஆயுதங்கள் போன்றவை, குடிமக்களை பெருமளவுக்கு கொல்லும் என்பதால், இலங்கை பாதுகாப்பு படைகள் அவற்றை பயன்படுத்தக்கூடாது என்று ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
மக்களை மீட்பதற்கும், அவர்களை காப்பாற்றுவதற்கும், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கை பாதுகாப்பு படைகள் இனி கவனம் செலுத்தும்.
போர் முனையில் சிக்கிக்கொண்டு உள்ள தமிழ்க்குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரின் பாதுகாப்பு பற்றிய பிரச்சினைகளே முதன்மையானவை ஆகும். அவற்றை தீர்ப்பதற்கு இலங்கை அரசு இன்று செய்துள்ள அறிவிப்பு முக்கியமான முதல் படியாகும்.
போர் முனையில் இருந்து வெளி வந்தோரின் துயரங்களை தணிப்பது மட்டும் இன்றி, போர் நடைபெறாத பகுதியில் இன்னும் தங்கி இருக்கும் குடிமக்கள் மற்றும் இடம் பெயர்ந்தோர் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தற்போதைய உடனடித் தேவையாகும்.
போர் பகுதியில் இருந்து வெளி கொணரப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு இந்திய பிரதமர் அவர்கள் 100 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளார் என்பதை அறிவித்திட மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிதியை பயன்படுத்துவதற்கான விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.