ஸ்வீடன் வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை தடை
இலங்கையில் போர்ப் பகுதியில் சிக்கியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவும், முழுமையான போர் நிறுத்தத்தை வலியுறுத்துவதற்காகவும் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார், ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட் ஆகியோர் வருவதாக அறிவிக்கப்பட்டது.
இவர்களில் இங்கிலாந்து, பிரான்ஸ், வெளியுறவு அமைச்சர்கள் வருகைக்கு இலங்கை வெளியுறவுத்துறை பச்சைக் கொடி காட்டியுள்ளது. ஆனால் ஸ்வீடன் அமைச்சருக்கு தடை விதித்து விட்டது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இரண்டு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகிறார்கள். அது போதும். அவர்களுடன் சேர்ந்து வர நினைத்தது ஸ்வீடன். ஆனால் அதை நாங்கள் நிராகரித்து விட்டோம்.
நாம் போய் நேராக கொழும்பில் இறங்கலாம். அங்கு சிவப்புக் கம்பளத்தை விரித்து வைத்து வரவேற்பார்கள் என சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் ஒன்றும் காலணி நாடு அல்ல அல்லது திவாலாகிப் போன மூன்றாம் உலக நாடும் அல்ல. எங்களுக்கு நிதியுதவி செய்யும் முக்கிய நாடுகள் ஐரோப்பாவில் இல்லை, ஆசியாவில்தான் உள்ளன என்று திமிராகக் கூறியுள்ளார்.
தூதரை திரும்ப அழைக்கும் ஸ்வீடன்..
இலங்கையின் இந்த திடீர் செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளது ஸ்வீடன். தனது நாட்டு தூதரை திரும்ப அழைத்திருப்பதாக கூறியுள்ளார் கார்ல் பில்ட்.
ஏற்கனவே போர் பாதித்த பகுதிகளுக்குச் செல்ல ஐ.நா. மனிதாபிமானக் குழுவை அனுமதிக்க வேண்டும் என கொழும்பில் 3 நாள் தங்கியிருந்து கோரிய ஜான் ஹோம்ஸின் கோரிக்கயையும் இளங்கை அரசு நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகளின் கோரிக்கைகளை எதையும் அது ஏற்க மறுத்து தொடர்ந்து திமிர்வாதமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஸ்வீடன் வெளியுறவு அமைச்சருக்கு விசா தர மறுத்ததோடு இல்லாமல், எங்களுக்கு நிதியுதவி செய்வது ஐரோப்பிய நாடுகள் அல்ல என்று கூறி ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் அது முகத்தில் அடித்துள்ளது.