பல்சுவை விருந்து-அதிமுக பிரமுகர் மீது வழக்கு
வாசுதேவநல்லூர்: கட்சிக்காரர்களுக்கு விருந்து அளிப்பதற்காக சாம்பார் சாதம், புளி சாதம் என விதம் விதமான சாப்பாடுகளை தயாரித்த அதிமுக பிரமுகர் மீது தேர்தல் பார்வையாளரின் உத்தரவின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட புளியங்குடி நகராட்சி 7வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் பண்டாரம் என்கிற செல்வராஜ்.
இவருக்குச் சொந்தமான காலியிடத்தில் 500 பேருக்குத் தேவையா விருந்து தயாரிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பார்வையாளர் முருகையாவுக்குத் தகவல் போனது.
இதையடுத்து தாசில்தார், போலீஸாருடன் முருகையா அங்கு விரைந்து வந்தார். செல்வராஜிடம் என்ன இது என்று கேட்டபோது, மகனுக்கு காதுகுத்து, அதற்குத்தான் விருந்து என கூறியுள்ளார்.
சமையல்காரரிடம் இதுகுறித்து விசாரித்தபோது அவர் செல்வராஜின் மகனுக்குப் பிறந்த நாள். அதற்குத்தான் விருந்து என வேறு விதமாக கூறினார்.
செல்வராஜ் வீட்டினரிடம் அதிகாரிகள் கேட்டபோது, கட்சிக்காரர்களுக்கு அளிப்பதற்காக விருந்து தயாராவதாக போட்டு உடைத்து விட்டனர்.
இதையடுத்து தேர்தல் பார்வையாளரின் உத்தரவின் பேரில், போலீஸார் செல்வராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.