புதிய தமிழகம், மனித நேய கட்சிக்கு ரயில் என்ஜின்
சென்னை: புதிய தமிழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சிக்கு ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தமுமுகவின் மனித நேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் உமாத், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன.
டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். மனித நேய மக்கள் கட்சி மயிலாடுதுறை, மத்திய சென்னை, ராமநாதபுரம், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும் மத்திய சென்னையில் பொதுச் செயலாளர் ஹைதர் அலியும் ராமநாதபுரத்தில் சலிமுல்லா கானும் பொள்ளாச்சியில் உமரும் போட்டியிடுகின்றனர்.
இந்த 5 பேருக்கும் ரயில் என்ஜின் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சரத்துக்காக புதிய தமிழகம் போட்டி வாபஸ்:
இந் நிலையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ கட்சிக்காகவே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லை என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
நெல்லையில் நிருபர்களிடம் பேசிய அவர், கடந்த 1998, 1999, 2004 ஆகிய மூன்று தேர்தல்களிலும் தென்காசியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இம்முறை வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
சரத்குமார் கட்சியின் வேட்பாளர்களுக்காக நெல்லை, தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெறச் செய்துள்ளேன். அதே போல சமூக நல்லிணக்கத்தோடு சரத்குமாரும் கார்த்திக்கும் எனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
சரத்குமார், கார்த்திக் ஆகியோரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் எனக்காக தென்காசி தொகுதியில் பிரசாரம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
விருதுநகர் தொகுதியில் கார்த்திக்குக்கும் மற்றும் நெல்லையில் சரத்குமாருக்கும் முறைப்படி ஆதரவு கொடுப்பது குறித்து விரைவில் அறிவிப்பேன். எனக்கு திமுக, அதிமுக தொண்டர்கள் ஆதரவு தந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றார்.
கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினாலும் அவரை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று பாஜக கூட்டணியில் உள்ள சரத்குமார் கூறிவிட்டது நினைவுகூறத்தக்கது.
கொங்கு முன்னேற்ற பேரவைக்கு சிலிண்டர் சின்னம்:
கொங்கு முன்னேற்ற பேரவை கட்சிக்கு சமையல் எரிவாயு சிலிண்டெர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி மொத்தம் பணிரெண்டு தொகுதிகளில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
பேரவையின் தலைவர் திரு. பெஸ்ட் ராமசாமி பொள்ளாச்சி தொகுதியிலும், பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கோவை தொகுதியிலும், கெளரவத் தலைவர் தேவராஜன் நாமக்கல் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இக் கட்சியின் சார்பில் மே 1ம் தேதி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கொங்குநாடு பொது தொழிலாளர் பேரவையும் துவக்கப்படுகிறது.