மிட்டல் நிறுவனத்துக்கு முதல் காலாண்டு நஷ்டம் ரூ. 5,350 கோடி
பாரிஸ்: நம்பர் ஒன் இரும்பு உற்பத்தி நிறுவனமான லட்சுமி மிட்டலின் ஆர்சிலர்மிட்டல் நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 5,350 கோடி சரிவை சந்தித்துள்ளது.
உலக பொருளாதார மந்தம் வர்த்தக உலகை தலைகீழாக புரட்டிப்போட்டு வருகிறது. இதன் தாக்கம் இரும்பு மனிதன் என வர்த்தகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் அதிபர் லட்சுமி மிட்டலையும் விட்டுவைக்கவில்லை.
இதையடுத்து அவரது நிறுவனம் தொடர் சரிவுகளை சந்தித்து வருகிறது. உலக பணக்கார பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த அவர் தற்போது கீழே இறங்கி எட்டாவது இடத்துக்கு வந்துள்ளார்.
தொடர்ச்சியாக லாபம் கண்டு வந்த அவரது நிறுவனம் தற்போது நஷ்ட கணக்கை காட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அவரது நிறுவனம் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அந்த நிறுவனம் சுமார் ரூ. 5,350 கோடி நஷ்டமடைந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தின் லாபம் கடந்த 2008ம் ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 18 ஆயிரத்து 200 கோடியாக இருந்தது. ஆனால் கடைசி காலாண்டில் லாபம் ரூ. 13 ஆயிரத்து 300 கோடியாக குறைய தொடங்கியது. ஆனாலும், தற்போது நஷ்மடைந்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் கூறுகையில், தேவை குறைந்துவிட்டதால், உற்பத்தியை நிறுத்திவிட்டோம். நிறுவனத்தின் செலவுகளை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பொருளாதாரம் மந்தமாகிவிட்ட நிலையில் அதிலிருந்த மீள தேவையான முயற்சிகளை செய்து வருகிறாம் என்றார் மிட்டல்.