அனில் அம்பானி கொலை முயற்சி வழக்கு-முக்கிய சாட்சி மர்ம மரணம்!
மும்பை: அனில் அம்பானியைக் கொலை செய்ய நடந்த முயற்சியின் முக்கிய சாட்சியாகக் கருதப்பட்ட பரத் போர்ஜ் என்பவர் நேற்று மர்மமான முறையில் ரயில்வே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.
சில தினங்களுக்கு முன், அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் அனில் அம்பானி வழக்கமாகப் பயணிக்கும் ஹெலிகாப்டரின் பெட்ரோல் டாங்கில் யாரோ மணல் மற்றும் கூழாங்கற்களைக் கொட்டி வைத்திருந்தனர். இதைக் கவனிக்காமல் பயணம் செய்திருந்தால் நிச்சயம் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். காரணம் இந்த கூழங்கற்கள் கியர் பாக்ஸ் மற்றும் எஞ்ஜினையே பதம் பாரக்கக்கூடியவை.
ஏர் வொர்க்ஸ் நிறுவன தொழில்நுட்பப் பணியாளரான பரத் போர்ஜ்தான் இதை சரியான நேரத்தில் கவனித்து அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து அனில் அம்பானியை கொல்ல சதி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூன்று தினங்களுக்கு முன் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் முக்கிய சாட்சியான பரத் பிணமானது பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
இறந்து கிடந்த பரத்தின் சட்டையிலிருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டது.
அதில் அவர் எழுதியிருப்பதாவது:
சில தினங்களுக்கு முன்பு அனில் அம்பானி கொலை முயற்சி சதி குறித்து என்னிடம் விசாரித்தனர் போலீசார். அதன் பிறகு ரிலையன்ஸ் அதிகாரிகள் சிலர் என்னை வந்து பார்த்தனர். அவர்கள் என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் நான் எதற்கும் பதில் கூற மறுத்துவிட்டேன்.
அவர்களில் ஒருவர் என் நம்பரை வாங்கிக் கொண்டு அடுத்த நாள் பேசுவதாகக் கூறிச் சென்றுவிட்டார். ன்னை அவர்கள் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கிறார்களோ என்ற பயம் வந்துவிட்டது. இதுபற்றி போலீசில் தெரிவிக்க முடிவு செய்து சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு வந்தபோது, அங்கே ஒரு நபரை போலீசார் சித்திரவதை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து பயந்துவிட்டேன். எதுவும் கூறாமல் வீடு திரும்பிவிட்டேன்.
உங்கள் விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உண்மை நிச்சயம் வெளியில் வரும்" என அதில் எழுதப்பட்டிருந்தது.
இதை அவர்தான் எழுதினாரா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்னொன்று, பரத் போர்ஜ் எதற்காக ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடக்க வேண்டும்... அவரை யார் மிரட்டினார்கள்? என்பதையெல்லாம் ஆராயக் கூட முயற்சிக்காத போலீஸ், 'இது தற்கொலைதான்' என உடனடியாக பைலை மூட முயற்சி செய்துள்ளது. பரத் ரயில்முன் பாய்ந்ததைக் கண்ணால் பார்த்ததாக ஒருவர் சாட்சியும கூறியுள்ளதாக போலீஸ் கூறுகிறது. ஆனால் கூப்பர் மருத்துவமனையில் பர்த்தை போஸ்ட் மார்ட்டம் செய்த மருத்துவர்கள், அவரது மரணம் தற்கொலைதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது என கூறியுள்ளனர்.
மர்மமான முறையில் இறந்த பரத் போர்ஜ் சாதாரண நபரல்ல, ராணுவத்தில் 20 ஆண்டுகள் பணிபுரிந்தவர். ஒரு முன்னாள் ராணுவ வீரர், காவல் நிலையத்தில் மற்ற கைதிகளை விசாரணை செய்ததைப் பார்த்து பயந்துவிட்டேன் என்று கூறுவது எத்தனை அபத்தமானது... இதில் பல உண்மைகளைப் போலீசாரும் ரிலையன்ஸ் அதிகாரிகளும் மறைக்கப்பார்க்கிறார்கள் என பகிரங்கமாகவே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.