தென்சென்னை சுயேட்சை வேட்பாளர் நீக்கம்
சென்னை: தென் சென்னையில் சுயேட்சையாக போட்டியிட விண்ணப்பித்த கோகுலநாதன் என்ற வேட்பாளர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேர்தல் ஆணையம் 2010 வரை தேர்தலில் போட்டியிட ஏற்கனவே தடை விதித்துள்ளதே இதற்கு காரணம் என தெரிகிறது.
தமிழகத்தில் மே 13ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.
அதிகபட்சமாக தமிழகத்தில் தென் சென்னை தொகுதியில் 44 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு தேசிய, மாநில கட்சிகளை தவிர்த்து பல சுயேட்சைகளும் போட்டியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அத்தொகுதியில் சுயேட்சையாக நிற்கும் கோகுலநாதன் என்பவரை வேட்பாளர் பட்டியலில் நீக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தென் சென்னை தேர்தல் அதிகாரி பாலாஜி கூறுகையில்,
மையிலாப்பூரை சேர்ந்த கோகுலநாதனின் வேட்புமனு நேற்று முன் தினம் பரிசிலனையில் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஏற்கனவே ஒருமுறை தேர்தலில் போட்டியிட்ட அவர், அப்போது வேட்புமனுவுடன் தனது சொத்து மதிப்பு இணைக்கவில்லை. இதையடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் 2010ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட தடை விதித்துள்ளது.
அவர் இந்த விஷயத்தை தனது வேட்புமனுவில் கூறவில்லை. இந்நிலையில் தற்போது தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலை பார்வையிட்ட போது அதில் அவரது பெயர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றார்.