தென்காசி தொகுதியில் தேமுதிக Vs தேமுதிக!
தென்காசி: தென்காசி தொகுதி தேமுதிக வேட்பாளர் இன்பராஜை எதிர்த்து அக்கட்சியை சேர்ந்த பாலகிருஷ்ணன் சுயேட்சையாக போட்டியிடுவது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தென்காசி தொகுதி பரபரப்பானதாகவே காணப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அக்கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் திமுகவும் இதை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு, விலகி கொண்டது.
இந்நிலையில் இங்கு ஓரளவு செல்வாக்கு கொண்ட பாஜக போட்டியிடாமல் தங்களது கூட்டணி கட்சியான சமகவிற்கு ஒதுக்கியது. ஆனால், சரத்குமார் அங்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு தரபோவதாக முதலில் கூறினார். பின்னர் தனது முடிவை மாற்றி கொண்டு யாருக்கும் ஆதரவில்லை என்றார்.
தற்போது தேமுதிக கூட்டணியில் அக்கட்சி வேட்பாளர் இன்பராஜை எதிர்த்து போட்டி வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இதற்கு உட்கட்சி குழப்பம் தான் காரணம் என தெரிகிறது.
இன்பராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் முழு நம்பிக்கை இல்லாத தேமுதிகவினர் அவருக்கு மாற்று வேட்பாளராக தேமுதிக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் பட்டதாரிகள் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை சுயேட்சையாக கட்சி வேட்பு மனு தாக்கல் செய்ய வைத்தது.
இந்நிலையில் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான 27ம் தேதி மாற்று வேட்பாளர்கள் இருவரையும் வாபஸ் வாங்க சொல்லி கட்சி மேலிடம் கேட்டு கொண்டது.
ஆனால், மாற்று வேட்பாளர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் மனுவை வாபஸ் பெறவில்லை.
மாவட்ட பட்டதாரிகள் அணி செயலாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் வேட்பு மனுவை வாபஸ் பெறாமல் தேமுதிக வேட்பாளரை எதிர்த்து தேமுதிக பிரமுகரான இவர் போட்டியிடுவது கட்சியிலேயே கோஷ்டி பூசல் ஏற்பட்டுள்ளதை காட்டுவதாக கூறுகின்றனர்.