திமுக கூறுவது போல எனக்கு சொத்து இருந்தால் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் - தா.பா
நெல்லை: எனக்கு சொத்து இருப்பதாகவும், அதை நான் மறைத்து விட்டதாகவும் திமுக கூறுகிறது. அப்படி எனக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதை அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.
நெல்லையில் அதிமுக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து பாவூர்சத்திரம், செங்கோட்டை, புளியங்குடி, சுரண்டை ஆகிய இடங்களில் தா.பாண்டியன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், கருணாநிதியும், தி.மு.க.வினரும் எனக்கு சொத்து இருப்பதாக கூறி வருகிறார்கள். அதை நிரூபித்தால் அதை நான் அவர்களுக்கே இனாமாக தந்து விடுகிறேன்.
மே 13-ம் தேதிக்கு பிறகு மத்தியில் மட்டும் இல்லாமல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடுமோ? அப்படி ஏற்பட்டால் நாம் எங்கே செல்வது? என்ற கவலையில் கருணாநிதி உள்ளார்.
இந்த ஆட்சி மீது மக்களுக்கு திருப்தி இல்லை. ஒரு பக்கம் ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு தரமற்ற அரிசி வழங்குகின்றனர். ஆனால் தரமான அரிசி கடைகளில் கிலோ ரூ.38-க்கு விற்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சியில் சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இது சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்பட பல மாநிலங்களில் நமது கூட்டணி வெற்றி பெறும். இதுவரை தோள்கொடுத்து வந்தோம். அதற்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. மக்களுக்கு துயரம் மட்டுமே கிடைத்தது.
இலங்கை தமிழர் பிரச்சினையில் கொளத்தூர்மணி, சீமான், நாஞ்சில்சம்பத் ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து அடைத்தனர். இப்போது என்ன ஆயிற்று என்றார் அவர்.