தனி ஈழம் சாத்தியம் இல்லை-சொல்கிறார் சு.சாமி
சிர்சி (கர்நாடகா): அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுவது போல தனி ஈழம் அமைப்பதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் முன்னாள் தோஸ்த்தும், இப்போது அவரால் ஏறெடுத்தும் பார்க்கப்படாதவருமான ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி.
கர்நாடக மாநிலம் சிர்சியில் உள்ள சோந்தா சொர்ணவல்லி மடத்தில் அவர் கூறுகையில், ஜெயலலிதா சொல்வது போல ஈழம் அமைப்பது எல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அங்குதான் அவர்களது உரி்மைகள் பாதுகாக்கப்படும்
அங்குள்ள தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை. விடுதலைப் புலிகள்தான் கேட்கிறார்கள்.
தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளின் ஆதரவை அவர் நாடுகிறார்.
சுவிஸ் வங்கிகளில் போடப்பட்டுள்ள இந்தியர்களின் பணம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் இருக்கும். இதை அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பித்து கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தலுக்குப் பின்னர் 3வது அணி இருக்காது. வேறு ஒரு புதிய அணி மூலம்தான வரும் மத்திய அரசு அமையும். இருப்பினும் இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும். அப்போது ஆட்சியைப் பிடிக்க பாஜக ஆயத்தமாக வேண்டும் என்றார் சாமி.