யு.எஸ்சிலிருந்து ஹைதராபாத் வந்த என்ஆர்ஐக்கு ஸ்வைன் ப்ளூ?
உலகத்தை பீதியடைய செய்துள்ள புதிய தொற்று நோய் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றி காய்ச்சல். வட அமெரிக்கா கண்டத்தில் மெக்சிகோ மற்றும் தெற்கு அமெரிக்க மாகாணங்களில் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது.
தும்மல், இருமல் போன்றவை மூலம் எளிதாக பரவிடும் என்பதால் அனைத்து நாடுகளும் வட அமெரிக்காவில் இருந்து வரும் விமான பயணிகளை சோதனையிட்டு வருகிறன்றனர். இந்தியாவில் உள்ள 9 முக்கிய விமான நிலையங்களிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் வட அமெரிக்க பகுதியில் கடந்த 10 நாட்களாக இந்த காய்ச்சல் இருப்பதை அடுத்து, கடந்த 10 நாட்களில் யார்? யார்? வட அமெரிக்க பகுதியில் இருந்து இந்தியா வந்துள்ளார்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. அவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களது உடல்நிலையை சோதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து சிறப்பு மருத்துவ குழு அமைக்கப்பட்டு இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அப்போது ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த நபரின் பெயர் என்ன என்பதை வெளியிட அரசு மறுத்துவிட்டது. அவர் ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் என்பதும், இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் மெக்சிகோ எல்லையை ஒட்டிய அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து வந்திருப்பதாகவும் தெரிகிறது.
மற்றவர்களுக்கு நோய் பரவிவிட கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
இது குறித்து ஆந்திர முதன்மை சுகாதார செயலர் எல்.வி. சுப்ரமணியம் கூறுகையி்ல், அவர் நாராயணகுடாவில் இருக்கும் பிரிவென்டிவ் மெடிசின் நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மூச்சு திணறல், சளி போன்றவற்றுக்கான முதன்மை சோதனைகள் நடத்தப்படும்.
பின்னர் அவர் எரகடாவில் உள்ள அரசு ஜெஸ்ட் மருத்துவமனையி்ல் தனிமைப்படுத்தப்படுவார். அங்கு அவர் 10 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். அவர் குடும்பத்தினர் யாருக்கும் இந்த நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்றார் அவர்.